சுஜாதாவைக் கடந்து சென்று... தமிழ்மகன்
தமிழ்கூறும் நல்லுலகுக்கு தமிழறிஞர் பலர் அரிய சேவை ஆற்றியுள்ளனர். தம் சொத்துக்களையெல்லாம் பதிப்புத் துறைக்கே செலவிட்டவர்கள், தமிழ்ச் சுவடிகளைத் தேடித் தேடிக் கண்டெடுத்தவர்கள், அவற்றுக்கு உரை எழுதியவர்கள், அதன் பேரில் ஆய்வுகள் செய்து வளர்த்தெடுத்தவர்கள்.. என்று தமிழைத் தக்க வைத்துக் கொண்டிருப்பவர்கள் பலர்.
 |
கணினி துறையில் இருந்தவாறே தமிழுக்கு சுஜாதா ஆற்றிய தொண்டு முழு நேர எழுத்துப் பணியில் இருந்து சேவை செய்வத பலரின் உழைப்புக்குச் சற்றும் சளைத்ததில்லை.
கன்னித் தமிழுக்கு ஜீன்ஸ் பேண்ட்டு, பாப் கட்டும் வெட்டி, கையில் கிடாரும் கொடுத்துப் பார்த்தவர் அவர்.
சுருக்கமும் அலங்காரமும் அங்கதமும் அவருடைய நடையில் அதிகமிருந்தது.
தொலைபேசியில் பேசினார் என்பதை "தொலை பேசினார்' என்றும் சுவரொட்டியை ஒட்டினான் என்பதை "சுவரொட்டினான்' என்றும் அவரால் சொற்களை ஏற்படுத்த முடிந்தது. நான் இந்த வாரம் உன்னுடன் இருக்க மாட்டேன் பரவாயில்லையா என்று கேட்கும் நாயகியிடம் நாயகன் "பரவா உண்டு' என்பான். |
தமிழில் அதற்கு முன்னும் பின்னும் அப்படியான ஜிலீர் நடை இருக்கவில்லை.
கடுகைத் துளைத்து ஏழ் கடலைப் புகுத்தியாத திருக்குறளைப் பாராட்டுவர். அது ஏழு சீரில் பல அரிய கருத்துகளைச் சொல்லும் திறன் படைத்து இருப்பதால்.
சுஜாதா திருக்குறளுக்கு உரை எழுதியபோது குறளைவிடச் சுருக்கமானச் சொற்களில் உரை எழுதினார்.
கண்ணுடையர் என்போர் கற்றோர் முகத்திரண்டு
புண்ணுடையர் கல்லா தவர்
திருவள்ளுவர் எழுதிய இக் குறளுக்கு சுஜாதா எழுதிய உரையை கவனியுங்கள்..
கற்காதவர் முகத்தில் இருப்பது கண்ணல்ல, புண்.
உணவில் பாஸ்ட் ஃபுட், உடையில் ரெடி மேட் என்றும் அவசரக்காலம் தெரியும் போது இலக்கியத்திலும் இருக்கும்தானே?
சாஃப்ட் வேர் என்ஜினியர் என்று அமெரிக்க எம்பஸி வாசலில் காத்துக் கிடப்பவர்கள் நான்காக மடித்து வைத்துக் கொண்டு படிக்கிற வாகில்னென் கீழ் கணக்கு நூல்களையும் குறுந்தொகையையும் தருவதற்கு அவர் முயற்சி எடுத்தார்.
அவருடைய 401 காதல்கவிதைகள் என்ற நூல் குறுந்தொகை பற்றியது..
பொதுவாக இச் சங்ககாலப் பாடல்கள் ஒரு இயற்கைக் காட்சியை விவரிக்கிறது.. கடைசி வரியில் அக் காட்சியையும் காதலின் அம்சத்தையும் முடிச்சுப் போடுகிறது என்பதைச் சுஜாதா சொல்லும்போது ஒட்டு மொத்தமாக நாம் இப் பாடல்களை எப்படிப் பார்க்க வேண்டும் என்பதைத் தெளிவுபடுத்துகிறது.
திருவிளையாடல் படத்தில் தருமி பாண்டிய மன்னனின் அரசவையில் பாடுவதாக இடம்பெற்ற இந்தப் பாடலைப் பார்ப்போம்.
கொங்கு தேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி
காமம் செப்பாது, கண்டது மொழிமோ,
பயிலியது கெழீஇய நட்பின், மயில் இயல்,
செறி எயிற்று அரிவை கூந்தலின்
நறியவும் உளவோ, நீ அறியும் பூவே.
-இறையனார் எழுதிய இந்தப் பாடலில் மேலோட்டமாக வாசிக்கும்போது ஒரு கடினத் தன்மையை உணருவதற்கு வாய்ப்பு அதிகம்.
ஆனால் அந்தப் பாடல் ஒரு அழகான காட்சியை விவரித்து காதலின் நயத்தையும் சொல்லுகிறது. எட்டு மணிக்கு எலக்ட்ரிக் ட்ரெயினைப் பிடிக்க ஓடிக் கொண்டிருப்பவனுக்கு இந்த வாசிப்பு அனுபவத்துக்கு நேரம் இருக்காது. அவனைச் சிறிது தூரம் கைப்பிடித்துக் கூட்டிவந்தால் அவனை அதை ரசிக்க வைக்க முடியும் என்று சுஜாதா நம்புகிறார்.
அதை எளிமைப்படுத்திக் கீழ் கண்ட முறையில் எழுதியிருக்கிறார்.
பார்த்துப் பார்த்து தேன் தேடி வாழும்
அழகிய இறக்கை வண்டே
எனக்காகப் பொய் சொல்லாமல்
பார்த்ததைச் சொல்.
மயில் போன்றவள், அழகான பற்களுடைய
அந்தப் பெண்ணின் கூந்தலைவிட
அதிக வாசனையுள்ள பூ உள்ளதா?
புதுக்கவிதையைப் போன்ற பாங்கில் சங்ககாலக் கட்டடத்துக்கு புது பெயிண்ட் அடித்துத் தருகிறார்.
இதை ரசிக்க ஆரம்பித்துவிட்டவனுக்கு அதன் பிறகு குறுந்தொகை மூலமும் உரையும் என்ற தலைப்பில் ஏதாவது நூலைப் பார்க்கும்போது அது அத்தனை அந்நியமாக இருக்காது. தைரியமாக கையில் எடுத்து வாங்கவும் வாசிக்கவும் செய்வான். சுஜாதா செய்திருக்கும் இந்த தமிழ்ச் சேவை, நிச்சயம் அவரைக் கடந்து போய் தமிழை அடைவதற்கு வழி வகுக்கும் என்ற நம்பிக்கை தருகிறது.
401 காதல் கவிதைகள்
சுஜாதா
உயிர்மை பதிப்பகம்,
11/29, சுப்பரமணியம் தெரு,
அபிராமபுரம்,
சென்னை- 18.
விலை: 150
uyirmmai@yahoo.co.in
இன்னும் படிப்போம்...
இந்தப் பகுதி ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் புதுப்பிக்கப்படும்.
|