பச்சைக் கிணறு - தமிழ்மகன்
 |
எந்த மனிதராலும் ஒரே ஒரு நாவல் எழுதி விடமுடியும் என்பார்கள். இது ஒரு வெளிநாட்டு அறிஞர் சொன்னதாக ஞாபகம். சொன்னவர் பெயர் ஞாபகம் இல்லை எனினும் அவர் சொன்னது மிகப் பெரிய உண்மை என்பது மட்டும் நிச்சயம். ஒவ்வொரு மனிதருக்குமான பிரத்யேகமான அனுபவங்கள் சுவாரஸ்யமாகச் சிரத்தையோடு சொல்லப்பட்டால் அது நல்ல நாவலாக அமையும் என்பதில் மாற்று கருத்து இருக்க முடியாது. சுயசரிதை வாசிப்பு அனுபவத்தோடு நாவல் அனுபவத்தையும் தருவதாக இருக்கிறது "என் மதுரை நினைவுகள்".
மனோகர் தேவதாஸ் இதைத் தன் சுயசரிதம் என்ற அறிவிப்போடுதான் எழுதியிருக்கிறார். இருந்தாலும் அது அவரை அறியாமல் ஒரு நாவலாக மாறியிருக்கிறது. உதாரணத்துக்கு தன் தந்தை ரத்தினம் டாக்டராக பணி புரிவதைவிட தீயணைப்பு வீரராக இருக்க |
விரும்புவதாக ஆங்கிலேயே டாக்டர் யார்ட்லியிடம் இந் நூலின் முதல் அத்தியாயத்தில் விவாதிக்கிறார். இறுதி அத்தியாயத்தில் (சுமார் முப்பதாண்டு இடைவெளிக்குப் பிறகு) ரத்தினத்தின் மறைவுக்கு ஒரு தந்தி வருகிறது. "ரத்தினத்தின் மரணம் அறிந்து பெரிதும் வருத்தம் அடைந்தேன். மறுபிறவியில் மகிழ்ச்சியான தீயணைப்பு வீரராக அவர் வரட்டும்..
....யார்ட்லி'.
இது போன்ற முடிச்சுக் கோர்வைகள்தான் ஒருவரின் வாழ்க்கை சம்பவச் சேர்க்கையை நாவலாக்குவதாக நினைக்கிறேன். அவருடைய பதின் வயதின் பல ஞாபகங்களை அவர் பெரிதும் போற்றுகிறவராக இருக்கிறார். யாருக்குமே அவர்களுடைய சிறுவயது அனுபவங்கள் வாழ்வின் கணம்தோறும் மகிழ்வூட்டுவதாக இருக்கிறதோ அவர்கள் பேறுபெற்றவர்களாக இருப்பார்கள். இப்படியும் சொல்லலாம். அதாவது சிறுவயது ஞாபகங்களை அசை போடத் தெரிந்தவர்கள் அதை மகிழ்வூட்டுவதாக மாற்றிக் கொள்வார்கள்.
மனோகர் தேவதாஸ் வாழ்வில் பச்சைக் கிணறு முக்கியமான நினைவுத்தளமாக வருகிறது. அவர்கள் குளித்து மகிழ்ந்து கொண்டாடித் திளைத்த இடம். அங்கு வரும் மற்ற பையன்களை விரட்டுவதற்கு மண்டை ஓட்டைப் பயன்படுத்துகிற சம்பவம் வருகிறது. தேக்கடி பகுதியில் யானை சுற்றிப் பார்த்தது இடம் பெறுகிறது. பள்ளிக் கூட மரக்கிளையில் தாவி விளையாடியதும், ரயிலடி பாலத்தில் அமர்ந்து அரட்டை அடித்தது இருக்கிறது. யோசித்துப் பாருங்கள். இது போன்ற சம்பவங்கள் இடம்பெறாத வாழ்க்கை யாருக்கேனும் இருக்குமா? அதை ரசிக்கவும் நினைத்துப் பார்த்து மகிழவும் தெரிந்திருக்கவும்தான் மனது வேண்டும். அந்த மனது மனோகர் தேவதாசுக்கு வாய்த்திருக்கிறது. ஆகையினால்தான் அதைப் பதிவு செய்ய விரும்புகிறார்.
இப்படிப் பதிவு செய்வதில் மனோகர் தேவதாசுக்கு இன்னொரு பக்குவமும் கை வரப் பெற்றிருக்கிறது. எழுத்துக்களால் மட்டுமின்றி ஓவியங்களாகவும் இந்தப் பதிவுகளைச் செய்திருக்கிறார். உயிரோவியம் என்பார்களே அது இதுதான். இந்த ஓவியங்களைப் பார்க்கும்போது இப்போது நம் கண்முன்னே நடைபெற்றுக் கொண்டிருக்கிற "தொடர் நிகழ்காலம்' விரிகிறது. அத்தனை உயிரோட்டம். புகைப்படக் கலையால் சாதிக்க முடியாத தருணம் இதுதான். இவருடைய பிரத்யேக கோட்டோவியம் மிகவும் நுணுக்கமானது. மனோகருடைய வீடு என்றால், கவனித்துப் பார்த்தால், அங்கே அவருடைய அப்பாவின் பைக் இருக்கிறது.
அந்த பைக்குக்கு ஒரு கதை இருக்கிறது. தன் பங்காக வந்த பூர்வீக நில பாகத்தை விற்று அந்தப் பணத்தில் (ரூ.700) அந்த பைக்கை வாங்கியிருக்கிறார் ரத்தினம். கடைசியில் விற்கும் போது அது முன்னூற்றி சொச்சம் ரூபாய்க்குத்தான் போகிறது. ஆனால் 700க்கு விற்கப்பட்ட அந்த நிலமோ 22 ஆயிரத்துக்கு மேல் விற்கிறது. ரத்தினத்தை ஊதாரி என்கிறார்கள்.
அவருடைய ஓவியங்கள் அனைத்திலும் முடிவுறாத ஒரு செயல்பாடு தெரிகிறது. தாவிக் குதித்துக் கொண்டிருக்கும் சிறுவர்களை வரைவதில்தான் அவருக்கு எத்தனை ஆர்வம்? பெரும்பாலும் அப்படித் தாவிக் குதித்துக் கொண்டிருப்பது ஜெயராஜ் என்கிற இன்னொரு ஓவியர்தான் என்பது இன்னொரு சிறப்பு. கோவில் பிரகாரம், குளம், பேசிக் கொண்டிருக்கும் பெண்கள், அவர்களைக் கிண்டல் செய்யும் பாவனையில் இளைஞர்கள்... எல்லாமே அழியாதச் சித்திரங்களாக மனதில் பதிந்துவிடுகின்றன.
ஆனால் அவர் வாழ்வாங்கு வாழ்ந்தவராக இருக்கிறார். மனைவியின் நகைகளைக்கூட விற்று புத்தகம் வாங்குபவராக இருக்கிறார். மிக கண்ணியமான மனிதர். இறக்கும் தறுவாயிலும் ரத்தினத்திடம் அதைக் காணமுடிகிறது. இவ்வளவையும் படித்த பின்பு மீண்டும் அந்த பைக் ஓவியத்தை ஒரு தரம் பார்க்கத் தூண்டுகிறது. சொல்லப்போனால் தன் தந்தை மதுரைக்குக் குடிபெயர்ந்ததிலிருந்து அவர் இறந்தது வரைதான் இந்த நாவல் பிரயாணிக்கிறது. அந்த ஆரம்பமும் முடிவும்கூட இதைச் சுய சரிதையிலிருந்து நாவலுக்கான தன்மைக்கு உயர்த்துவதாக இருக்கிறது.
மனோகரின் பால்யகால நண்பர்களைப் பற்றிய குறிப்புகள் நூலின் கடைசி வரை இடம் பெறுகிறது. கேப்ரியல், ஓவியர் ஜெயராஜ், ஹமீது, பீமன், முத்து உள்ளிட்டவர்களை அவர் கடைசி அத்தியாயத்திலும் முத்தாய்ப்பாகச் சொல்லி முடிக்கிறார்.
சற்றேறத்தாழ சுதந்திர காலகட்டத்தில் ஆரம்பித்து, தந்தையின் மறைவுக்குப் பிறகு குடும்ப சுமை தன் தோள்களில் அமர்ந்ததுவரைச் சொல்லியிருக்கிறார் மனோகர். அன்றைய மதுரையைப் பற்றிய வரலாறாகவும்கூட இப் பதிவைக் கொள்ள முடிகிறது. மீனாட்சி அம்மன் கோவில், ஆனைமலை, அமெரிக்கன் கல்லூரி, சேதுபதி பள்ளி, ரயில் நிலையம், பேருந்து நிலையம், தவிர அன்றைய மதுரையின் வயல் வெளிகள் நம் மனதில் விரிகின்றன. சற்றேறத்தாழ ஐம்பதாண்டுகளுக்கு முந்தைய மதுரையைப் பற்றிய சொல்லோவியமும் கோட்டோவியமும் சுவராஸ்யமான ஆவணமாக நமக்குக் கிடைக்கிறது. அவரே சொல்வது போல மதுரைச் சுற்று வட்டாரக் கிணறுகள் அவருக்குப் பெரிய மகிழ்ச்சி ஊற்றாக இருக்கிறது. பச்சைக் கிணறு மட்டுமல்ல அங்கிருந்த பாழுங்கிணறுகள் எல்லாமே தனக்குப் பிடித்தவைதான் என்கிறார். மதுரை திரையரங்குகளில் அன்றைய ஆங்கிலத் திரைப்படங்களின் இரண்டுவிதமான போக்குகளை விவரிக்கிறார். ரீகல் தியேட்டரில் ஒருவிதமான ஆங்கிலப்படங்களும் இம்பீரியல் தியேட்டரில் வேறுவிதமான திரைப்படங்களும் திரையிடப்பட்டது இன்றும் பெரிய மரபாகவே மாறியிருப்பதை உணர முடிகிறது.
தந்தை கேன்சரால் இறந்து, மனைவிக்குக் கார் விபத்தில் மிகப் பெரிய பாதிப்பு ஏற்பட்டு, தனக்கும் பார்வை சிக்கல்கள் ஏற்பட்டு வாழ்வின் அத்தனைத் துயரங்களோடும் போராடும்போதும் அவரைத் தக்கவைக்கும் சுவாரஸ்யமாக இருப்பது அவருடைய இளம் பிராய நினைவுகள்தான்.
ஜித்தன் சாட்டர்ஜி என்ற கொல்கத்தா தோழருடன் மனோகர் கொள்ளும் உரையாடல் இது:
""மகிழ்ச்சி இல்லாத இளமைப் பருவம் வாய்ச்சவங்க, பிற்கால வாழ்க்கையில் கிடைக்காததை எட்டிப் பிடிக்கப் பார்ப்பாங்க. இல்லைன்னா பெரிய சாதனையாளர்களாக இருப்பாங்க. ஆனா மகிழ்ச்சியான இளமைக்காலம் கிடைச்சவங்க போல இல்லாம, மன அமைதி கிடைக்காம தவிப்பாங்க.''
..."மிஸ்டர் மனோகர், நான் உங்களைப் பார்த்துப் பரிதாபப்படவே இல்ல. ஒருவிதத்தில உங்களைக் கண்டுப் பொறாமைப்படுறேன்னுகூட சொல்லலாம்.''
ஆங்கிலத்தில் யோசித்துத் தமிழ்படுத்திய ஒரு மொழி நடை சற்றே அந்நியமாகவும் அதனாலேயே ஒரு வசீகரிப்பும் கொண்டதாக இருக்கிறது இந்நூலுக்கு. எனது மதுரை நினைவுகள் என்று தலைப்பிட்டிருப்பதால் தன்மை முன்னிலையில் எழுதப்படாமல் மூன்றாம் நபர் பார்வையில் எழுதப்பட்டது ஏன் என்று புரியவில்லை.
மிக அழுத்தமான இளமைக்கால "எழுத்தோவியம்'. அள்ள அள்ள குறையாத பசுமைக் கிணறு.
வெளியீடு
என் மதுரை நினைவுகள்
மனோகர் தேவதாஸ்
கண்ணதாசன் பதிப்பகம்
23, கண்ணதாசன் சாலை,
தி.நகர்., சென்னை-17
விலை ரு.150
இன்னும் படிப்போம்...
இந்தப் பகுதி ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் புதுப்பிக்கப்படும்.
|