|
சிற்றிதழ்கள், இன்றைய சமுதாயத்தின் முக்கியத் தேவை என்றால் அது மிகையாகாது. பொதுவாக தன்னுடைய படைப்புகள் வெகுஜனப் பத்திரிக்கையில் வெளிவராத ஆதங்கத்தில் ஒருசிலர் சிறு பத்திரிக்கைகள் ஆரம்பிப்பதாக ஒரு குற்றச்சாட்டு உள்ளது. ஆனால் வெகுஜனப் பத்திரிக்கைகள் சொல்ல மறந்த அல்லது மறுத்த பல உண்மைகளை சிற்றிதழ்களே வெளிக்கொணருகின்றன. மிக அருமையான பல படைப்புகள் இன்று சிற்றிதழ்களில் காணப்படுகின்றன.
எழுத்தாளர்களுக்கு சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்பு அளிக்கும் சிற்றிதழ்கள் விற்பனை அளவில் இன்னும் வெகுஜனப் பத்திரிக்கைகளின் அளவை எட்ட வில்லை என்பது வேதனைக்குரிய ஒன்றாகும். மேலும் பல நல்ல படைப்பாளிகள், எழுத்தாளர்கள், கவிஞர்கள் பரவலாக அறியப்படாமல் அவர்களின் திறமை எடுபடாமல் போய் விடுகின்றன. வெகுஜனப் பத்திரிக்கையில் வெளிவரும் பல கவிதைகளை விட சிற்றிதழ்களில் வெளிவரும் கவிதைகள் நம்மை வியக்க வைக்கின்றன.
எனவே சிற்றிதழ்கள் பற்றிய அறிமுகத்தை பரவலாகக் கொண்டு போய் சேர்க்கும் முயற்சியின் ஒரு பகுதியாக தமிழ் ஸ்டுடியோ.காம் இல் தமிழில் வெளிவரும் அனைத்து சிற்றிதழ்கள் பற்றிய அறிமுகங்களும் வெளிவர இருக்கின்றன.
அறிமுகம் மட்டுமின்றி அந்த சிற்றிதழ்களில் வெளிவந்த சிலக் கட்டுரைகள், கவிதைகளும் உங்கள் பார்வைக்கு இங்கே வைக்கப்படுகின்றன. இந்த சிற்றிதழ்களை நீங்கள் வாங்க விரும்பினால் அதன் வெளியீட்டாரை தொடர்பு கொள்ளும் வகையில் அவரது முகவரியும் கொடுக்கப்பட்டுள்ளது.
சிற்றிதழ்கள் சேகரிப்பு எனும் இந்த அறிய முயற்சியில் எங்களுக்கு உறுதுணையாக இருக்கும் பலருக்கும் இந்த நேரத்தில் எங்கள் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
பெரும்பாலான சிற்றிதழ்களை திரு. வலம்புரி லேனா அவர்களே அறிமுகப் படுத்த இருப்பதால் அவரைப் பற்றி சிறு அறிமுகம்.
வலம்புரி லேனாவின் இயற்பெயர் லெட்சுமணன், அண்மையில் காலஞ்சென்ற இவரது தந்தையர் வலம்புரி எழிலன் கவிஞர், நாடகம் மற்றும் புதின எழுத்தாளர்.
வலம்புரி லேனாவின் பிறந்த தேதி 12.11.1967. இதழியல் மற்றும் தகவல் தொடர்பியலில் எம்.ஏ. பட்டம் பெற்றவர். கவிதை, சிறுகதை, துளிப்பா (ஹைக்கூ), கட்டுரைகள் எழுதக்கூடியவர்.
சொந்த ஊர் புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி வலையபட்டி
1984 ஜனவரி முதல் படைப்பிலக்கிய மாத இதழாக `மதுமலர்’ என்ற இதழைத் தொடங்கினார். பள்ளி இறுதி வகுப்பிற்குப் பிறகு திருச்சி மாவட்டம் (தற்போது கரூர் மாவட்டம்) குளித்தலையில் மேல்நிலைப் பள்ளி வகுப்பும், மதுமலரும் தொடர்ந்தன. மாதந்தோறும் தவறாது கையெழுத்து இதழ் வெளியானது.
கல்லூரி இறுதியாண்டில் (1990) பேராசிரியர் ஆ. ஜெகந்நாதன் மற்றும் நண்பர்கள் தூண்டுதலால் அச்சுரதன் அமறி வந்தது. ஓராண்டு காலத்திற்குப் பிறகு சிற்றிதழ்களுக்கே உரிய பொருளாதாரப் பிரச்சினைகளில் தடைப்பட்டு தடைப்பட்டு பல வடிவங்களில் மதுமலர் வெளியாகி 2006 முதல் காலாண்டு இதழாக வெளிவர ஆரம்பித்தது. 12 இதழ்களுக்குப் பிறகு தந்தையாரின் மறைவால் இலக்கியப் பணியில் தொய்வு ஏற்பட மதுமலர் தற்காலிக நிறுத்தத்திற்கு ஆளாகி உள்ளது. மே மாதத்திலிருந்து மீண்டும் மலர உள்ளது.
இவரது கவிதைகள் சந்தக்காடு, சூரிய வீதி என்ற நூல்களாக வெளிவந்துள்ளன.
பலரது கவிதைகளைத் தொகுத்து கூட்டுத் தொகுப்பாக மூங்கில் காற்று, இலைதுளிர்காலம், கான்கீரிட் காடுகள், என்ற நூல்களும் `கண்ணாடி மனசு’ என்ற துளிப்பா நூலும் வெளியிட்டுள்ளார்.
இவரது துளிப்பானூலான `மனங்கொத்திப் பறவை’ 2003-ம் ஆண்டிற்கான கவிஞாயிறு தாராபாரதி விருது பெற்றுள்ளது.
இவரது நண்பர் தச்சன் இரா. நாகராஜனுடன் இணைந்து `உடைந்து இருட்டு’, `இமைகளின் மௌனங்கள்’ என்ற கூட்டு கவிதைத் தொகுப்பு நூல்களைத் தொகுத்து வழங்கியுள்ளார்.
படைப்பாளர்களுக்குள் அறிமுகமும் நட்பும் உருவாக `முகம் தேடும் முகங்கள்’ என்ற நூலை வெளியிட்டுள்ளார். இதன் இரண்டாம் தொகுதி தயாராகி வருகிறது. விருப்பமுள்ள படைப்பாளர்கள் பங்கு பெறலாம்.
தற்போது `தமிழ் ஓசை’ நாளிதழில் ஞாயிற்று கிழமை இணைப்பான களஞ்சியத்தில் `வாசிக்கும் சில சிற்றிதழ்கள்’ என்ற தலைப்பில் 80 வாரங்களாக சிற்றிதழ்களை அறிமுகமும், விமர்சனமும் எழுதி வருகிறார்.
கவியரங்கங்களிலும் பங்காற்றியுள்ளார். சிற்றிதழ்களிலும், பிரபல இதழ்களிலும் இவரது கவிதைகள் கட்டுரைகள் வெளி வருகின்றன.
சிற்றிதழ்கள் மீது தீராத காதல் கொண்ட இவரின் முகவரி:
வலம்புரி லேனா
முதன்மைச் சாலை
திருவாலம்பொழில் 613 103
திருவையாறு வட்டம்
தஞ்சாவூர் மாவட்டம்
கைபேசி : 98941 38439
எனவே வாசகர்கள் சிற்றிதழ்களை வாங்கி பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
நீங்களும் உங்களுக்கு தெரிந்த சிற்றிதழ் பற்றிய அறிமுகத்தை தமிழ் ஸ்டுடியோ.காமிற்கு அனுப்பி வைக்கலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி:
|