|
Shyam Raat Seher - ஒளியில் கசியும் மௌனம்.
அண்மையில் பார்க்கக் கிடைத்த ஓர் இந்திக் குறும்படம் Shyam Raat Seher. ஒளிப்பதிவு மற்றும் இயக்கத்திற்காக தேசிய விருதுப் பெற்றக் குறும்படம். பெருமைக்குரிய விஷயம் இதில் பங்கேற்ற பெரும்பாலான தொழில்நுட்பக் கலைஞர்கள் தமிழர்களே. மதம், இனம் கடந்து வாழ்பவனே கலைஞன். இதில் தமிழர்கள் என்பதில் ஏன் பெருமிதம் கொள்ள வேண்டும் என்றால் எனக்குத் தெரியாது. அது ஒரு இனம் புரியாத இன உணர்வு. தொழில்நுட்ப அளவில் மிக சிறப்பாய் வந்திருக்கும் இந்தக் குறும்படம் அதன் உட்கருத்திலும் சிறப்பாய் வந்திருப்பதே இந்தப் படத்தை பற்றி இங்கே எழுத காரணம்.
 |
வடிவமும், பொருளடக்கமும் சிறந்து விளங்கும் எந்த ஒரு படைப்பும் அதன் தளத்தில் நின்று நீடிக்கும் தன்மைப் பெற்றது. திரையிட்ட இடங்களில் இந்த படம் பற்றி எழுந்த சல சலப்பு. படம் சட்டுன்னு புரியலையே? என்பதுதான். நமது பொதுப் புத்தி எப்போதும் ஒன்றைப் பார்த்தவுடன் அது நமது அறிவுக்கு எட்ட வேண்டும், என்கிற விதியை (Rules) நமக்குள் எழுதி வைத்துவிட்டது. தவிர இதுப் போன்ற படங்கள் பார்த்த முதல் மாத்திரத்திலேயே புரிந்த விடக் கூடிய அளவிற்கு இன்னும் இங்கே திரைப்பட ரசனை வளர்க்கப்படவில்லை. எனவே புரியாமல் போவதில் ஆச்சர்யமில்லை.
மிக யதார்த்தமான, எளிமையான கதைதான். நகர வாழ்வில் சிக்கி தங்கள் சுயங்களை இழக்கும் சராசரி மனிதர்களின் வாழ்வு தான் இந்தக் குறும்படம். ஒரு நாடகக் கலைஞன், மாடல், ஹேன்ட் மாடல் (பல நேரங்களில் நமக்குக் காட்டப்படும் மாடல் பெண்களின் கைகள், விரல்கள் போன்றவை சரியில்லை என்றால், அவர்களுக்கு தங்கள் கைகளை மட்டும் மாடல்களாக வைத்து, பின்னணியில் இருக்கும் மாடல் பெண்கள், எளிமையாக சொன்னால் பின்னணிக் குரல் கொடுக்கும் கலைஞர்கள் போன்று), ஒரு காவலன் (Watch Man) ஆகிய நால்வரும் சந்திக்கும் மையப்புள்ளி ஒரு விபத்து. எல்லோரும் தங்கள் வேலையை முடித்துவிட்டு, தூங்க செல்கின்ற இரவு நேரத்தில் தான் பணிக்கு செல்ல வேண்டியிருக்கிறதே என்கிற விரக்தியில் வாழும் காவலன், தன்னுடைய மனைவி தன்னை விட்டுப் பிரிந்து விட்ட துயரத்தில் வாடும் நாடகக் கலைஞன், காதலன் என்று நம்பியவன் கைவிட்ட வருத்தத்தில் வாழும் மாடல் என நகர வாழ்வில் தேர்ந்தெடுக்கப்பட்ட மனிதர்கள் யதார்த்தத்தை தாண்டாத தேர்வு.
நாடகக் கலைஞன் ஏ. டி. எம்மில் படம் எடுத்துக் கொண்டிருக்கும்போது, காரை ஒட்டி வரும் மாடல் (காதலன் கைவிட்ட கோபத்தில்) ஏ. டி. எம்மை காவல் காத்துக் கொண்டிருக்கும் காவலன் மீது மோதி விடுகிறார். அவரது நாற்காலியும், அணிந்திருக்கும் கண்ணாடியும் உடைந்து விட தன்னுடைய இயலாமை நினைத்து வெடிக்கும் மிக இயல்பான கோபத்தில் மௌனமாகிறார். பிறகு அவருக்கு கண்ணாடியை கொடுக்கும் மாடல், உடைந்த நாற்காலிக்கு பதில் தன்னுடைய வீட்டில் இருக்கும் வேறொரு நாற்காலியை கொடுப்பதாக சொல்கிறார். ஆனால் அவளால் மேற்கொண்டு காரை ஓட்ட முடியாத சூழலில் காரை ஒட்டி செல்கிறான் நாடகக் கலைஞன். பின்னர் ஹேன்ட் மாடலுக்கும், நாடகக் கலைஞனுக்கும் இடையே ஒரு பிணைப்பு ஏற்பட்டு, அதுவும் தன்னுடைய தடம் தெரியாமல் போவதுமே கதை.
நாடகக் கலைஞனாக நடித்திருப்பவர் மிக இயல்பான நடிப்பை கொடுத்திருகிறார். அப்படியே நகர வாழ்வின் மென் சோகங்களை தன் முகத்தில் பிரதிபலிக்கிறார். மாடலாக வருபவரை விட ஹேன்ட் மாடலாக வருபவர் தன் நடிப்பால் ஈர்க்கிறார். காவலனாக நடித்திருப்பவர் நல்ல தேர்வு. கச்சிதமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.
இக்குறும்படத்தின் நாயகன் என்றால் கொஞ்சமும் யோசிக்காமல் சொல்லி விடலாம் அதன் ஒளிப்பதிவாளரை. இதுப் போன்ற ஒரு கதைக்கு மிக முக்கியமான தேவை, கதையை உள்வாங்கி அதன் ஓட்டத்தில் செல்லக்கூடிய ஒளிப்பதிவு. குறிப்பாக விபத்து நடக்கும் முன்னர் பெய்திருக்கும் மழையிலிருந்து கசியும் வண்ணங்கள். நாற்காலியை காருக்குள் வைக்கமுடியாமல் காரின் கதவுகளில் மாட்டி செல்லும்போது அந்த நாற்காலியை மையப் படுத்து அவர் வைத்திருக்கும் ஷாட், இரவின் வெறுமையை உணர்த்தும் ஒளி அமைப்பு என குறும்படத்தை தாங்கி நிற்கிறார். ஆனால் மது விருந்தில் தேவை இல்லாமல் வைக்கப்பட்டிருக்கும் அந்த பறவைக் கோண ஷாட் மட்டும் கொஞ்சம் உறுத்தினாலும், அங்கே வைக்கப்பட்டிருக்கும் பான் ஷாட் அதற்கான நியாயத்தை உணர்த்துகிறது. சுரங்கப் பாதையில் நாடகக் கலைஞனும், ஹேன்ட் மாடலும் பேசிக் கொண்டு நகரும்போது கசியும் ஒளியில் இருக்கிறது ஆயிரம் அர்த்தங்கள். இப்படியான ஒரு ஒளியமைப்பு இதுவரை பார்த்திராதது. பதிவு செய்யப்பட்ட ஒரு படத்தை பார்க்கிறோம் என்கிற உணர்வை விட அந்த கதாப்பாத்திரங்களுடன் நாமும் பயணம் செய்கிறோம் என்கிற உணர்வே படம் முழுக்க நமக்கு ஏற்பட முக்கிய காரணம், ஒளிப்பதிவாளரின் நேர்த்தி. ஒளிப்பதிவு செய்திருப்பவர் ஜி. முரளி. தேசிய விருதுக்கான மிக சரியான தேர்வு.
இசையமைப்பாளரும், படத்தொகுப்பாளரும் தங்களின் பங்கை மிக சரியாக செய்திருக்கிறார்கள். சுரங்கப் பாதையில் நாடகக் கலைஞரும், ஹேன்ட் மாடலும் பேசிக் கொண்டிருக்கும்போதும், ரயிலுக்குள் அவர்கள் முத்தத்தை பரிமாறிக் கொள்ளும்போதும் இசை நம்மை ஈர்க்கிறது. நாற்காலி காட்சிகளிலும், கதாப்பாத்திரங்களின் சோகங்கள் வெளிக்காட்டப்பட்டிருக்கும் இடங்களிலும் படத்தொகுப்பு கவிதை பேசுகிறது. இப்படத்தின் தொழில்நுட்பக் கலைஞர்களில் மிக முக்கியமாக குறிப்படப் பட வேண்டியவர் இதன் ஒலி அமைப்பாளர். மிக யதார்த்தமான ஒளியமைப்பு. பல இடங்களில் அப்படியே நம்மை படத்தில் ஆழ்ந்து விட செய்வது இந்த ஒலி அமைப்பே.
திரைப்பட கல்லூரியில் படித்துவிட்டு படமெடுப்பவர்கள் தொழில் நுட்ப அளவில் சிறந்த படத்த எடுத்தால் அதில் ஆச்ச்சர்ப்பட ஒன்றுமில்லை. ஏனெனில் அவர்கள் அதைத்தான் படிக்கிறார்கள். ஆனால் யாரும் சொல்லித்தரமுடியாத வாழ்வின் நுட்பங்களை, மௌனங்களை ஒரு கதையின் கொண்டு வருவதென்பது போற்றத்தக்கது. அந்த வகையில் இதன் இயக்குனர் அருணிமா ஷர்மா இந்திய சினிமா உலகில் பிரகாசிக்கப் போகும் நட்சத்திரம் என்றால் அது மிகையல்ல.
தொடர்புக்கு: முரளி. ஜி. 9884303166 |