கடந்த சனிக்கிழமை (20-12-2008) அன்று சென்னை எக்மோரிலுள்ள ஜீவன ஜோதி அரங்கில் தமிழ் ஸ்டுடியோ.காம் நடத்திய மூன்றாவது குறும்பட வட்டம் இனிதே நடைபெற்றது. இந்த முறை அறுபதுக்கும் மேற்பட்ட ஆர்வலர்கள் கலந்துக் கொண்டு குறும்பட வட்டத்தை சிறப்பித்தனர். முதல் இரண்டு மாதங்கள் நடைபெற்ற குறும்பட வட்டம் முழுவதும் கலந்துரையாடல் மட்டுமே நடைபெற்றது. இந்த முறை மேலும் சிறிது மாற்றங்களுடன், மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, முதல் பிரிவில் இலக்கியங்களை எப்படி குறும்படமாக எடுப்பது என்கிற விவாதமும், இரண்டாம் பிரிவில் குறும்படங்கள் திரையிடலும், பின்னர் அதுபற்றிய கலந்துரையாடலும் நடைபெற்றது. மூன்றாவது பிரிவாக குறும்பட இயக்குனர்கள், ஆர்வலர்கள் கலந்துரையாடலும், விவாதமும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் அதிகமான குறும்படங்கள் திரையிடப்பட்டக் காரணத்தால் மூன்றாவது பிரிவு இம்மாதக் குறும்பட வட்டத்தில் நடைபெறவில்லை.இந்தத் தவறு அடுத்த குறும்பட வட்டத்தில் நடைபெறா வண்ணம் நிகழ்ச்சி அமையும் என்று தெரிவித்துக் கொள்கிறோம்.
முதல் பிரிவு:
இலக்கியங்களை எப்படி குருமபடங்களாக்குவது என்கிற தலைப்பின் கீழ் உரையாற்ற வந்த டாக்டர். திருமதி. பத்மாவதி விவேகானந்தன் அவர்கள் சென்னை மீனாக்ஷி கல்லூரியின் பேராசிரியர்.
முதலில் பொதுவான தமிழ் இலக்கியங்கள் பற்றி பேசிய அவர் சங்க இலக்கியப் பாடல்களை எப்படி குறும்படமாக எடுப்பது என்பது பற்றி விரிவாக விளக்கினார். அடுத்து 'இல்லை' என்கிற சிறுகதையை வாசித்து அதனை எப்படி குறும்படமாக எடுப்பது என்பது பற்றி தெளிவான வழிமுறை ஒன்றைக் கூறினார். அடுத்து "அம்மா ஒரு கொலை செய்தால்" என்கிற சிறுகதையை கூறி அதில் உள்ள சோகத்தன்மையை கூறி குறும்படங்களில் உணர்வுகளை எப்படி பதிவு செய்ய வேண்டும் என்கிற ஒரு கருத்தையும் பதிவு செய்தார். சுற்றுப்புற சூழலை பற்றி அதிக குறும்படங்கள் வரவேண்டும் என்றுக் கேட்டுக்கொண்ட அவர் சங்கக் கால பெண்கள் வாழ்க்கை முறையையும் படமாக்க வேண்டும் என்றுக் கேட்டுக் கொண்டார்.
இறுதியில் படைப்பாளிகள் அதிக அளவில் புத்தங்கள் படிக்க வேண்டும் என்கிற கருத்தை வலியுறுத்தினார்.
அடுத்தாக ஒரு சில ஆர்வலர்கள் அவரிடம் தங்களது வினாக்களை எழுப்பினர்.
புதுவையில் வந்திருந்த கலைமாமணி. திரு. முருகன் அவர்கள் தான் இயக்கியிருந்த ஒரு குறும்படத்தில் வள்ளுவரின் கொண்டை குறித்து இலக்கியவாதிகள் எழுப்பிய சர்ச்சையை திருமதி. பத்மாவதி விவேகானந்தன் அவர்களிடம் கூறி, இலக்கியவாதிகள் இதுபோல் முரண்பட்ட கருத்துகளை தெரிவ்ப்பது சரியா என்றொரு வினாவை எழுப்பினார்.
இதற்கு விடையளித்த அவர், ஒருவரின் தோற்றத்தை எப்படி வேண்டுமானாலும் சித்தரிக்கலாம். என்று ஒரு சில விளக்கங்களை கூறினார்.
அதனைத் தொடர்ந்து பல ஆர்வலர்கள் வினாக்களை எழுப்பினர். அவர்களுக்கு திருமதி. பத்மாவதி விவேகானந்தன் விடையளித்தார். பின்னர் வண்டலூரில் இருந்து வந்திருந்த திரு. பாலாஜி யுவராஜ் அவர்கள் வினாவுக்கும் தெளிவான விடையளித்தார். இறுதியில் குறும்படங்கள் ஒரு மாற்று அமைப்பதற்கான முயற்சி என்பதனை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தினார்.
இரண்டாம் பிரிவு:
அடுத்தாக இரண்டாம் பிரிவில் குறும்படங்கள் திரையிடப்பட்டது. முதலாவதாக குறும்பட வட்டத்திற்கு வருகைத் தந்திருந்த இயக்குனர் திரு. வ. கௌதமன் அவர்களின் 'ஏரி', 'பூ' போன்ற குறும்படங்கள் திரையிடப்பட்டது. பின்னர் இக்குறும்படங்கள் கவிஞர். திரு. பச்சையப்பன் அவர்களின் கவிதைகளில் இருந்து படமாக்கப்பட்டது என்றும் அவை படமாக்கப்பட்ட விதம் பற்றியத் தகவல்களையும் பரிமாறிக்கொண்டார்.
பின்னர் ஆர்வலர்கள் அவரிடம் பல வினாக்களை எழுப்பினார். திரு. ராஜேஷ், திரு. ரமேஷ் மற்றும் பல ஆர்வலர்கள் தங்கள் வினாக்களை எழுப்பி அதற்கான விடையையும் பெற்றுக் கொண்டனர்.
அடுத்தாக திரு. டென்சிங் அவர்கள் இயக்கிய 'காதல்', 'காசு', ஆகிய குறும்படங்கள் திரையிடப்பட்டது. பின்னர் திரு. டென்சிங் அவர்கள் தனது அனுபவத்தினை ஆர்வலர்களுடன் பகிர்ந்துக் கொண்டார். பின்னர், திரு. கார்த்திக் சோமசுந்தரம், திரு. ரமேஷ், உள்ளிட்ட ஆர்வலர்கள் தங்கள் ஐயங்களை தீர்த்துக் கொண்டனர்.
அடுத்தாக புதுவையில் இருந்து வந்திருந்த திரு. மு. ஜெய் வினோ அவர்கள் இயக்கிய "வயலாரும் திருவள்ளுவரும்" எனும் குறும்படம் திரையிடப்பட்டது. பின்னர் அவர் தனது அனுபவங்களை ஆர்வலர்களுடன் பகிர்ந்துக் கொண்டார். அடுத்து திரு. ராஜசேகரன் அவரிடம் இது போன்ற திரைப்படங்களுக்கு தமிழக அரசிடம் இருந்து உதவித் தொகை கிடைக்கும் என்கிற தகவலைக் கூறி
தொடர்புடைய அதிகாரிகளைத் தொடர்புக் கொள்ளுமாறு அறிவுத்தினார். அடுத்து பல ஆர்வலர்கள் தங்கள் வினாக்களுக்கு தெளிவான விடையை பெற்றுக் கொண்டனர்.
அடுத்தாக திரைப்படக் கல்லூரி முன்னாள் மாணவர் திரு. சுந்தர் அவர்கள் இயக்கிய "வந்தே மாதரம்" திரையிடப்பட்டது. சாதாரணக் குறும்படங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டு பிரம்மாண்டமான திரைப்படம் போல் படமாக்கப்பட்டிருந்த விதம் பலரையும் கவர்ந்தது. பின்னர் தனது அனுபவங்களை ஆர்வலர்களிடம் பகிர்ந்துக் கொண்ட திரு. சுந்தர் அவர்கள் அத்திரைப்படம் ஒரு புகழ் பெற்ற வெளிநாட்டு திரைப்படத்தின் தாக்கமே என்பதை கூறிக்கொண்டார்.
பின்னர் பல ஆர்வலர்கள் அவருக்கு தங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டனர். ஒரு சிலர் அவரிடம் தங்கள் வினாக்களை எழுப்பி சந்தேகங்களைத் தீர்த்துக் கொண்டனர்.
இந்த மாதம் முதல் சந்தாக் கட்ட வேண்டும் என்கிற எங்களின் கோரிக்கையை ஒரு சில ஆர்வலர்கள் தங்களின் சந்தாத் தொகையினை செலுத்திவிட்டனர். மேலும் தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் தமிழ் ஸ்டுடியோவின் குறும்பட வட்டத்துக்கு புதுவையில் இருந்து வருகை புரியும் திரு. சந்திரசேகரன் (யாழ் நிலவன்) தமிழ் ஸ்டுடியோவிற்கு தன்னுடைய ஒரு சில ஆலோசனைகளைக் கூறினார்.
தொடர்ந்து பல ஆர்வலர்கள் தங்கள் தமிழ் ஸ்டுடியோ பற்றி தங்கள் கருத்துகளைப் பகிர்ந்துக் கொண்டனர். குறும்பட வட்டத்தின் இடையில் அனைவருக்கும் தேநீர் விருந்து பரிமாறப்பட்டது. பின்னர் ஆர்வலகளின் கருத்து பதிவோடு மூன்றாம் குறும்பட வட்டம் இனிதே முடிவுற்றது.
மேலும் ஒளிப்படங்களைக் (Photos) காண கீழே உள்ள இணைப்பை சொடுக்கவும்.
http://picasaweb.google.co.in/thamizhstudio/ThirdKurumbadaVattam#
--------------------------------------------------------------------------------------------------------------------------------
மூன்றாவது குறும்பட வட்டம்: சனிக்கிழமை (20-12-2008)
இடம் : சென்னை ஜீவன ஜோதி அரங்கில் இக்சா மையம். இவ்வரங்கம் சென்னை கன்னிமாரா நூலகம் எதிரில் அமைந்துள்ளது.
நேரம்: மாலை மூன்று மணி (3 மணியளவில்)
மூன்றாவது குறும்பட வட்டம் சிறிது மாற்றங்களுடனும் புதுப் பொலிவுடனும் நடைபெற உள்ளது. மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்டு வாசகர்களுக்கு / ஆர்வலர்களுக்கு மேலும் பயனுள்ள வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
முதல் பகுதி:
இரண்டு குறும்படங்கள் திரையிடப்பட்டு அதுபற்றிய விரிவான விவாதம் நடைபெற உள்ளது. இறுதியில் அக்குறும்படங்களின் இயக்குனர்கள் தன்னிலை விளக்கம் அளிப்பார்கள்.
இரண்டாம் பகுதி:
தமிழில் மிகச்சிறந்த சமூதாய தாக்கத்துடன் வெளிவந்த ஒரு சிறுகதை அல்லது நாவலின் ஒரு பகுதி தெரிவு செய்யப்பட்டு, அதனை ஆர்வலர்கள் படிக்க, இலக்கியத் துறை சார்ந்த ஒருவர் அந்த நாவலில் உள்ள கதாபாத்திரங்களை எப்படி திரைக்குள் கொண்டு வருவது, மேலும் அந்த சிறுகதையை எப்படி படமாக்கலாம் என்று தன்னுடைய விரிவான ஆலோசனையும் வழங்க உள்ளார்.
மூன்றாம் பகுதி:
ஒரு குறும்பட இயக்குனர் அல்லது அந்தத் துறையின் அனுபவம் வாய்ந்த ஒருவர் தலைமைத் தாங்க குறும்பட வாசகர்கள் தங்களுக்குள் கருத்துகளை பரிமாற்றிக் கொள்ளும் நிகழ்வு நடைபெறும். இதில் குறும்படங்களை எப்படி விற்பனை செய்வது, குறும்படங்களை எப்படி குறைந்த செலவில் படமாக்குவது போன்ற கருத்துகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
தொடர்ந்து தமிழ் ஸ்டுடியோவின் குறும்பட வட்டம் நடைபெறும் அரங்க வாடகை உள்ளிட்ட செலவுகளுக்காக இந்த மாதம் முதல் வாசகர்கள் தங்கள் சந்தாத் தொகையினை கட்டுமாறு கேட்டுக் கொள்கிறோம். சந்தாத்தொகை ரூபாய் 50 மட்டும்.
மேலும் விபரங்களுக்கு:
9840698236, 9894422268
|