|
வணக்கம் நண்பர்களே,
இலக்கியம் இல்லா வாழ்வு உயிர் இல்லாத உடல் போன்றது என்பார்கள். ஆம் உண்மைதான் இலக்கியம் எங்காவது ஓரிடத்திலாவது உங்கள் வாழ்க்கையில் கலந்து இருக்கும். எனக்குப் படிக்கும் பழக்கம் இல்லை. கலை, இலக்கியம் என்றால் என்ன என்றே எனக்கு தெரியாது என்று பெருமையாகக் கூறிக் கொள்ளும் பல மூடர்கள் தங்கள் வாழ்வில் இடர் ஏற்படும்போது அதனை சமாளிக்கத் தெரியாமல் தற்கொலை எனும் கோழை முடிவுக்கு செல்வதை நாம் கண்கூடாக காண முடிகிறது.
இலக்கியம் உங்களை செம்மைப்படுத்தும். உங்களை முழுமையாக்கும். உங்களை பண்படுத்தும். பண்பாளராக மாற்றும். இன்னும் என்ன என்னவோ செய்யும். படித்துப் பாருங்கள். பரவசம் அடைவீர்கள். ஒரு சிலருக்கு படிக்க ஆர்வம் இருக்கும். ஆனால் சங்க இலக்கியங்களை படிக்கும்போது சில இடங்கள் புரியாமல் அவர்கள் தவிப்பதும் உண்டு. சங்க இலக்கியங்களை எளிமையாக அனைவரும் படிக்க வேண்டும் என்பதற்காகவே தமிழ் ஸ்டுடியோ.காம் புதிய பகுதி ஒன்றை உங்களுக்கு அறிமுகம் செய்கிறது. "கவிதை வடிவில் சங்க இலக்கியங்களை", "இலக்கியச் சோலை" எனும் பெயரில் தொடராக வாசகர்களுக்கு வழங்குவதுதான் அந்த முயற்சி. இலக்கியங்களை வெண்பா அல்லது விருத்தப்பா எனும் மரபு கவிதைகளுக்கு உட்படுத்தப்பட்டு எளியத் தமிழில் படைத்து, இலக்கியங்களின் மீது அனைவருக்கும் ஆர்வம் ஏற்பட செய்யும் நோக்கமே இந்தப் பகுதி.
இந்தப் பகுதியில் தொடர்ந்து சங்க இலக்கியங்களை வெண்பாவாகவோ, விருத்தப்பாவாகவோ எளிய தமிழில் உங்களுக்காக எழுத இருக்கிறார், மதுரையை சேர்ந்த திரு. பாபாராஜ் அவர்கள். திருக்குறளின் மூன்று பிரிவுகளையும் வெண்பாவாக படைத்து பரவலாக அறியப்பட்ட திரு. பாபாராஜ் அவர்கள் பற்றிய சிறு அறிமுகம். தமிழ் ஸ்டுடியோ.காம் வாசகர்களுக்கு.
 |
அழகப்பா கல்லூரியில் அறிவியல் இளவல் (பயிரியல்) பட்டம் முடித்து மதுரை பென்னர் இந்தியா நிறுவனத்திலும் சென்னை BMF நிறுவனத்திலும் கணக்குத் துறையில் 32 ஆண்டுகள் பணிநிறைவு செய்து தற்போது ஓய்வில் உள்ளார்.தமிழ் ஆர்வம் தூண்ட 1970 களிலிருந்து மரபுக் கவிதை படைக்கும் வாய்ப்பைப் பெற்றார். இதுவரை கவிச்சாரல்-கவியமுதம்-மகரவிளக்கு-மரபுகளின் அருவி-மகிழம்பூ-கிளிஞ்சல்கள்-மகரயாழ்-அற்புதத்தரு- |
திருக்குறள் பேழை-திருக்குறள் (1330 குறள்களுக்கும் வெண்பாப் பாங்கில் கவிதை விளக்கம்) என 10 நூல்கள் வெளியிட்டுள்ளார். REVERBERATION என்ற ஆங்கிலக் கவிதை நூலும் வெளியிட்டுள்ளார்.வானொலி,தொலைக்காட்சிகளில் கவிதை நிகழ்ச்சியில் பங்கேற்று வருகின்றார். தமிழ் நாடு அரசு புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் நூற்றாண்டு விழா கவிதைப் போட்டியில் 100 கவிஞர்கள் தெரிவு செய்யப்பட்டனர். அதில் இவரும் ஒருவர். மதுரை நற்கூடல் இலக்கியக் கழகத்தின் தலைவராக பொறுப்பில் மதுரை தமிழ்ச்சங்க ஆதரவுடன் கவியரங்கம், பட்டிமன்றம், கவிதைப்போட்டி நடத்தியுள்ளார். மொழிபெயர்ப்புப் பணியை (ஆங்கிலம் -- தமிழ்) தற்சமயம் மேற்கொண்டுள்ளார். 100 க்கும் மேற்பட்ட கவியரங்கங்களில் பங்கேற்றுள்ளார்.
இலக்கியச் சோலையில் முதலாவதாக கம்பராமாயணத்தில் உள்ள பாடல்களில் சில வெண்பாவாகவோ, விருத்தப்பாகவோ படைக்க உள்ளார் திரு. பாபாராஜ் அவர்கள்.
வருகின்றத் திங்கள்கிழமை (27-07-09) முதல் ஒவ்வொரு வாரமும் திங்களன்று "இலக்கியச் சோலை" பதிவேற்றப்படும்.
|