|
யாவரும் கேளிர் - பகுதி - 9 -- (ரவிவர்மன், ஒளிப்பதிவாளர்)
கோபம் வந்த “கொளந்தசாமி காசு பிரிக்க வேண்டாம் போனா மயிராச்சு, வந்தா லாபம் .நீயா நானான்னு பாத்திடுவோம்” என சொல்ல ஆரான் குறுக்கே புகுந்து சீட்டுக்கட்டை களைத்து இருவருக்கும் பிரித்துப் போட்டான். இருவரும் சீட்டுக்களை எடுத்துக்கொண்டு ஒருவரை ஒருவர் பார்க்க ஆரான் சொன்னமாதிரி ஒப்பன் டிக்ளர். நரசிம்மன் செயிச்சிட்டான். தோத்துப்போன கொளந்தசாமி கோபமாக இருக்க “ம்... ஒப்பன் டிக்ளர்ன்னு அப்பவே சொன்னோம்ல கேட்டாதானே” என தூண்டிவிட்ட ஆரானை கடும்கோபத்துடன் கொளந்தசாமி எட்டி உதைக்க அத தடுக்க போன நரசிம்மனையும் உதைக்க கலவரம் பெருசானது.
தீபாவளிக்கு வாங்குன ஆட்டுகறிய மதிய உணவுடன் சாப்பிட்டுக்கொண்டிருந்த ஊர்மக்கள் பாதி சாப்பிட்டும் சாப்பிடாமலும் எழுந்து சண்டை நடக்கும் இடம் நோக்கி செல்கிறார்கள்.ஒருவீட்டின் தாழ்வார முற்றத்தில் மாட்டியிருந்த வேல்கம்பை உருவிய நரசிம்மன், வேல்கம்பால் கொளந்தசாமியின் வயிற்றில் குத்த, வயிறு கிழிந்து குடல்சரிந்து வெளியே வந்துவிட்டது. தனது குடல்சரிந்து கீழே விழுவதை பார்த்த கொளந்தசாமி கண்ணிமைக்கும் நேரத்தில், தன் இடுப்புவேட்டியை அவிழ்த்து, சரிந்தகுடலை உள்ளே தள்ளி வேட்டித்துணியால் இறுக்கிக்கட்டிக்கொள்ளும்போது வெள்ளை வேட்டி சிவப்பாக மாறி அவனின் கம்யூனிசம் வெளிப்பட வெறிநாய்போல சுற்றும் முற்றும் பார்க்க, அதைக்கண்டு பயந்த நரசிம்மன் வேல்கம்பை கீழே போட்டுவிட்டு அங்கிருந்து ஒட்டம் பிடிக்க, வீடும் கடையும் ஒன்றாக வைத்திருக்கும் தனுக்கொடி வீட்டின் முற்றத்தில் மாட்டியிருக்கும் அருவாளை (கிராமங்களில் கொடிய ஆயுதங்களை வீட்டின் முற்றத்தில் வைத்திருப்பது வழக்கம்) எடுத்து கொளந்தசாமி நரசிம்மனை துரத்த, அதைக்கண்ட வேலாயி இரண்டு கொலை விழப்போவுதுன்னு ஓலமிட்டு மூச்சிறைக்க ஒட, அவளின் சத்தம்கேட்டு கயித்துக்கட்டிலில் படுத்திருந்த கண்ணுதெரியாத தாத்தா கட்டிலைவிட்டு எழுந்து வேகமாக அவரின் துணைவன் காந்திதாத்தா கம்புவை தேட அருகிலிருந்த கருங்கல் தடுக்கி கீழே “அய்யோ அம்மா...மா என்ற அலறல் சத்தத்துடன் விழுந்தவர் எழவே இல்லை. அவரின் கால்மூட்டு உடைந்து பலநேரங்களில் நகரத்தில் சாலையில் குறுக்கே செல்லும் நாயை இருசக்கர வாகனம் மோதி துடிக்கும் நாயைப்போல் துடித்துக்கொண்டுருக்க, நரசிம்மனை துரத்திக்கொண்டு போன கொளந்தசாமியும் தன்னை வேல்கம்பால் குத்துன நரசிம்மனின் ஒருகையை வெட்டிவிட்டான். கொளந்தசாமிக்கும் வயிற்றில் அதிக ரத்தம் வெளியேறி மயங்கி கீழே விழ, வெட்டுப்பட்ட நரசிம்மனும் மயங்கி கீழேசாய அதற்குள் கொளந்தசாமியின் மனைவியும் நரசிம்மனின் தங்கையுமான நல்லமுத்துவின் ஒலத்தால் அதுவரை வேடிக்கை பார்த்துக்கொண்டுருந்த ஊர்மக்கள் கூடி இருவரையும் மருத்துவமனைக்கு தூக்கிச் செல்கின்றனர்.
ஆரான் தனுக்கொடியிடம், “ஒண்ணுமில்லண்ணே நரசிம்மனுக்கு ஒரு கைபோச்சு, கொளந்தசாமிக்கு தண்ணி எரைக்கிற சாலு மாதிரில்ல வயிறு அதான் கீழே விழுந்திருச்சி அவ்வளவுதாண்ணே” என சொல்ல தனுக்கொடி” வெட்டுனது யாரு அருவா என் அருவால்ல ... நேத்துதான் கருங்கல் தூள தூவி அதுல கொஞ்சம் அரளியையும் தேச்சு வச்சேன். பளபளன்னு மின்னுச்சு... ஒரே போடு கை கச்சிதமா கீழே விழுந்திருச்சில்ல...இனிமே கைசேருரது கஷ்டம்ந்தே ஆரான் கீழ கொடவிழலயே அதுக்குள்ள புடிச்சுட்டானே.
தொடரும்...
(இப்பகுதி ஒவ்வொரு திங்களன்றும் புதுப்பிக்கப்படும்)
ரவிவர்மன் அவர்களை மின்னஞ்சலில் தொடர்பு கொள்ள: ravivarmannet@gmail.com
|