|
யாவரும் கேளிர் - பகுதி -42-- (ரவிவர்மன், ஒளிப்பதிவாளர்)
யாழி மீது வழக்குகள் பெரிதாக பதிவாகவில்லை என்றாலும் தேவையில்லாத விசாரணை. மன உளச்சல், பணவிரயம் சம்பந்தம் இல்லாத வழக்குகளை உருவாக்கும் நம்முள் யாழியும் ஒன்றாகிப்போனதால் சிறையில் இருந்து வெளியே செல்ல காத்திருந்த போது மதிய உணவு நேரம் வந்தது. ஜெயில் கைதிகள் அனைவரும் உணவை பெற்றுக்கொள்ள வரிசையில் நின்று கொண்டு இருந்த வேளையில் உணவு வழங்கப்பட்டுக்கொண்டே இருந்தாலும் வரிசை நகர்வதாக இல்லையே என்று எட்டிப்பார்த்தாள். ஒருவளே பலமுறை உணவு பெற்றுக்கொண்டு இருந்தாள். அதைக்கண்ட அவள் அவளுக்கு முன்வரிசையில் நின்றவளிடம் “ஒருத்தியே பலமுறை சாப்பாடு வாங்கிட்டு இருக்காளே” என்று கேட்க, அவள் அருகில் உள்ளவள் மிகவும் ரகசியமாக யாழியிடம் “இங்க சாராய பாப்பான்னு ஒரு பொம்பள இருக்கா அவ பெரிய ரவுடியாம் நாலுபேர கொலை பண்ணி இருக்காளாம். ஆனா கொலைக்கான ஆதாரங்கள் எதுவும் இல்ல போலீஸ்காரங்களுக்கு தெரியும் அவதான் கொலைகாரின்னு அதனால சந்தேகத்தின் பேர்ல பிடிச்சு கொண்டாந்து ஜெயில்ல வச்சிருக்காங்க. அதோ பார் என்று கைகாட்டிய திசையில் சாராய பாப்பா இருந்தாள்.
அவளை பார்த்தபடியே அவதான் என்றாள். ஆறடி உயரம் கொண்டு 90 கிலோ எடையும் கொண்டவளாக சிறையில் செல்போனில் சிரித்துக்கொண்டே சிலாகித்து போனாள். அதைப்பார்த்த யாழிக்கு ஆச்சரியம் எதிரில் பேசியப் பெண்ணிடம் “என்னங்க கொலைகார கைதின்னு சொல்லுறீங்க ஆனா செல்போன்ல ஜாலியா பேசிட்டு இருக்காங்க. இங்க நிக்கிற போலீஸ்சும் கண்டுக்கல. அடப்போங்க ஜெயில்ல மட்டும்தாங்க எல்லா போதை வஷ்துகளும் ஒரே இடத்துல கிடைக்கும். ஜெயிலுங்குறது மனிதன் திருந்த உருவாக்கப்பட்டது, ஜெயில் கொடுமையானது அப்படிங்குறது எல்லாம் பொய்ங்க. ஜெயில் தண்டன அனுபவுச்சுகிட்டும் தப்புபண்றதுல பெரும்பாலானவங்க ஜெயில்லதாங்க வெளியே நடக்கும் அட்டூழியத்துக்கு வடிவம்பண்ணி கூட்டணி சேர்த்துகிட்டுபோறாங்க. இந்த மாதிரி இருந்தா எப்படிங்க?
“ஒ... அதனாலதான் அக்கிரமங்கள் அதிகமா நடக்குதோ”
“எது எப்படியோங்க வரிசை நகருது வாங்க”
அப்போது யாழிக்கு, ஒருத்தி பலதடவை உணவு வாங்குவதை பார்த்து அவள் நினைவு பின்னோக்கியது....
பெரும்பாலும் அகதிகள் முகாமில் நானூறுபேர் வரிசையில் நின்றால் அதில் இருனூறு பேருக்கு மட்டுமே உணவு இருக்கிறது என்றால். அதைக்கண்ட அகதிகள் இருனூறு பேர் பெற்றுக்கொண்ட பிறகு மீதமுள்ள இருனூறுபேர் அமைதியாக திரும்பிவிடுகிறார்கள். அடுத்த உணவுமுறை வரும்போது முதலில் பெற்ற இருனூறுபேர் தாங்கள் கடைசியாக நின்று கொண்டு பெறாதவர்களை முன்னிருத்தி வாங்க வைத்தனர். அதிலும் குழந்தைகளைத்தான் முதலில் வரிசையில் நிறுத்தினர். தங்களுக்கு வயோதிகம்தட்டி தவறும்போது இந்த இளைஞர்களாவது போராடட்டுமே என்றுதான். எம்மக்கள் உணவை உயிர்வாழ்வதற்கு பயன்படுத்தினர். ஆனால் இங்கே உண்பதையே வாழ்க்கையாக்கி கொண்டுள்ளனர் என்றாள். அவள் முறை கடைசியாக வந்தபோது பாத்திரத்தில் பண்டமின்றி பிண்டமாகிப்போன யாழியை பார்த்து “சாரி” என்று கூறிவிட்டு காலியான பாத்திரத்தை எடுத்துச்செல்ல
அவள் அதை பொருட்படுத்தாமல் இன்னைக்குதான் வெளியே போறோமே வெளியவே சாப்பிட்டுக்கலாம் என்று நினைத்தாள்.
சிக்காகோவில் ஒரு இரவு உணவு விடுதியில் யாழியும் அரிதாவும் பேசியபடியே உணவருந்திக்கொண்டு இருந்தனர்.
“காசிக்கு போனது இவ்வளவு பெரிய கதையா?”
“கதையில்லடி உண்மை”.
“உண்மைதான் காலம்கடந்தா கதையாகிரும், நீ கடந்து வந்த பாதையில இவ்வளவு சந்திச்சிருக்கயா?
“இவ்வளவு மட்டுமில்ல இதையும் சந்திச்சிருக்கேன்”
“இது எல்லாம் கேட்கும்போது வாழணுமாங்கற எண்ணம்? தோணுதுடி”
“ஏன் அப்படி சொல்லுற”
“பின்ன என்ன காசி விஸ்வநாதேஷ்வரர்கிட்ட தான் நிம்மதியாவும் நீண்ட ஆயுளோட வாழணும்னு வேண்டிக்கிட்டு கோயிலுக்குள்ள வர்ற மக்கள் ஒரு நாளைக்கு ஒரு லட்சம்பேர். அந்த கோயிலுக்கு போற வழியில நூற்றுக்கணக்கா வயோதிகர்கள் சாவின் வருகைக்காக காத்திருக்கும்போது வெளியே வந்தா அரிச்சந்திரா மயானகண்டத்தில் ரேசனுக்கு கியூவுல நிற்கிறமாதிரி பிணங்களை எரிக்க கியூவேற, எரிஞ்ச பொணத்த திங்குறதுக்கு மனிதர்கள் (அகோரிகள்) ஒருபக்கம், நாய்கள் மறுபக்கம். இதை எல்லாம் நீ பார்த்தேன்னு சொன்ன பிறகு எனக்கு எப்படி வாழ்கை வெறுக்காம போகும்னு நினைக்குற”..................
தொடரும்...
(இப்பகுதி ஒவ்வொரு திங்களன்றும் புதுப்பிக்கப்படும்)
ரவிவர்மன் அவர்களை மின்னஞ்சலில் தொடர்பு கொள்ள: ravivarmannet@gmail.com
|