|
யாவரும் கேளிர் - பகுதி -39-- (ரவிவர்மன், ஒளிப்பதிவாளர்)
Bucky என்பது செல்லப்பெயர். முழுப்பெயர் Richard Buckminster Fuller (Bucky):
Architect, Philosopher, and Poet. உயரம் 5’2 அங்குலம். 12 வயசுல அப்பாவ இழந்து, 32 வயசுல சூசைட் அட்டன்ட் பண்ணி, கடைசியா ஒரே ஒருமுறை, போராடித்தான் பார்ப்போமே என்று முயற்சித்த போது நாற்பத்தி நான்கு முறை doctorate பட்டம், Gold Medal of the American Institute of Architects, Gold Medal of the Royal Institute of British Architects, Nominated for Nobel Peace Prize. 1932: The portable Dymaxion house, 1934: The Dymaxion car, 1938: Nine Chains to the Moon,1949:Developed the Geodesic Dome,1967:Biosphere,(The US Pavilion atExpo 67) 1969: Operating Manual for Spaceship Earth, 1970: Approaching the Benign Environment, 1975: Synergetics: Explorations in the Geometry of Thinking. இப்ப அவருடைய பொன்மொழி “Whenever I draw a circle, I immediately want to step out of it.” எல்லோரிடமும் அன்பாக இருங்கள். உங்களுக்கு தெரிஞ்சத மத்தவங்ககிட்ட சொல்லுங்க. அவங்கக்கிட்ட இருந்து உங்களுக்கு தேவையானதை மட்டும் எடுத்துக்குங்க. எந்த நேரத்திலயும் மனிதநேயத்த இழக்காதீங்க. பாருங்க 32 வயசுல எதிர்காலமே இல்லைன்னு தற்கொலை பண்ண நெனச்சவரு ஒரு நிமிஷம் முடிவ மாத்தினதால அவரு எவ்வளவு சாதனைகள் பண்ணி என்னையை போல இளைஞர்களுக்கு நல்ல வழிகாட்டியா இருந்து, 88 வயசுல இறந்துபோனாருங்க. உங்களையும் அவர்மாதிரி 88 வயசுல இறந்துபோகச் சொல்லல.. ஒரு 60 வயசுவரை வழ்ந்துட்டு போங்களேன்.
“ஏன் நா 90 வயசுவரை வாழக்கூடாதா?”
“அப்ப தற்கொலை....?”
“அடப்போயா தற்கொலையாவது மண்ணாங்கட்டியாவது. நானும் இந்த உலகத்துல போராடிப் பார்க்கப்போறேன். நீங்க சொன்ன Richard Buckminster Fuller மாதிரி எல்லாம் சாதிக்க வேண்டாம் என்னய காப்பாத்திக்கிட்டா போதும். சரி உங்கமேல எனக்கு ஒரு சந்தேகம் என் பின்னாடி எவ்வளவு நாளா சுத்திகிட்டு இருக்கீங்க?”
“ உங்க பின்னாடி சுத்துறதுதாங்க எனக்கு பொழுதுபோக்கே. நீங்களும் என்னயை பார்த்திருக்கீங்க.”
“எப்போ”
“அதான் ரோடுல அடிபட்டு ஹாஸ்பிட்டல்ல பஞ்சுக்குள்ள மறஞ்சுயிருந்தேனே.” என்று அவன் சொன்னதை கேட்ட அவள் புரியாமல் பார்க்க,
“உங்க ரூம்ல இருந்து மூணாவது ரூம்ல இருக்குறேங்க.... பார்ட்டியில கூட கஞ்சா கொடுத்தீங்களே...”
“ஒ...... ஆமா நீங்க ஏன் என்ன காப்பாத்த போராடினீங்க? பெரிய மனசுள்ள ஆளுங்க நீங்க”
“அதுயெல்லாம் இல்லைங்க எனக்கு ரொம்ப சின்ன மனசுங்க அதுக்குள்ள நீங்கதான் இருக்கறீங்க. அதான் உங்கள காப்பாத்தணும்னு தோணுச்சு.” “அப்ப நீங்க என்ன சொல்லவர்றீங்க”
“நான் உங்கள விரும்புறேன்”
“நான் ஏற்கனவே ஒருத்தன விரும்பியிருக்கேன்”
“நான் உங்க கூட வாழ்க்கை முழுவதும் வாழணுன்னு ஆசைப்படுறேன்”
“நான் அவன்கூட 2 வருஷம் வாழ்ந்திருக்கேன். அவன்கூட ஊர் சுத்தியிருக்கேன்.”
“நான் உங்கள சுத்தியே வந்துகிட்டு இருக்கேன்”
“உண்மையை சொல்லட்டுமா? நான் அவன் கூடப் படுத்தேயிருக்கேன்.”
“பரவாயில்லைங்க, அந்த பொழுதுதான் கடந்துபோச்சே”
“பல இரவுங்க”
“திருப்பி அந்த இரவுகள் வரப்போரது இல்ல.”
அவள் அமைதியானாள். செல்லாவும் அமைதியானான். இருவரும் மரப்பாலத்தை கடந்து மண் சாலையை தொட்டுவிட்டனர்.
“சரி அவன்கூட எத்தனை வருஷம் இருந்தீங்க?
“2 வருஷம்”
“என்ன ஒரு பத்துவாட்டி படுத்திருப்பீங்களா?”
“இடியட் மாதிரி பேசாதீங்க.”
அவன் பயந்தான்.. கேட்க கூடாததை கேட்டுவிட்டோமோ, என்று. அப்பொழுது அவள் சிரித்தாள்.
“இரண்டு வருடத்தில் மாதத்தில் மூன்று நாட்களை தவிர மற்ற எல்லா நாட்களும் அவனுடன் உடலுறவு கொண்டிருக்கிறேன். ஒருசில முறை கருவும் கலைத்திருக்குறேன்.”
அவன் அமைதியானான்.
“கேட்குற உங்களுக்கே கூச்சமா இருக்கே வேற ஒருத்தன சுமந்த நான் எப்படி இன்னொருத்தன சுமக்க முடியும்ன்னு நினைக்குறீங்க..... இதை எல்லாம் கேட்டு இவள ஏண்டா காப்பாத்தினோம் இவ செத்தே இருக்கலாம்ன்னு தோணுதுயில்ல.”
“இல்லைங்க இதுக்கு முன்னாடி வரையும் முதல்ல உங்களோட அழகு, அப்புறம் உங்களோட பணம் இதுதாங்க எனக்கு உங்கமேல காதல் வரவச்சது... ஆனா முழுசா தெரிஞ்சதுக்கு அப்புறம் உங்ககிட்ட இருந்து எதுவுமே வேண்டாங்க நீங்க மட்டும் என்கூட இருந்தா போதும். செக்ஸ் மட்டுமே வாழ்கை இல்லைங்க.. நம்மல சந்தோஷப்படுத்துற விரசமும் சேர்ந்த்துதான் வாழ்கை. நான் இதுநாள் வரை மிகப்பெரிய சுயநலவாதீங்க. முதல்முறையா உங்களால பொதுநலவாதியா ஆகிட்டேங்க. நேரடியா விஷயத்துக்கு வர்றேங்க உங்கள எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு, நீங்க இல்லாம இனிமே எனக்கு வாழ்கை இல்லைங்க. அதாங்க இந்த பாழாப்போன லவ் உங்கள நினச்சு என்னப்பாடாப் படுத்துங்க. என்னடா உடனே சொல்லிட்டான்னு பார்க்குறீங்களா லவ்வுன்றது பல வருஷமா ஒருத்தன் மேல வராமலும் போகலாம் அதே நேரத்துல ஒரு நிமிஷத்துலயும் வரலாமிங்க, அத அடைய பல வருஷம் காத்திருந்தாலும் பரவாயில்லைன்னு தோணுதுங்க.” என்று சொல்லி முடிக்கும் போது அவள் அவனைவிட்டு வெகுதூரம் சென்றிருந்தாள். கத்திச் சொன்னான் “என்னங்க” என்றான். அதற்கு பதிலாக அவள் “கவலைப்படாதீங்க தற்கொலை எதுவும் பண்ணிக்கமாட்டேன்” என்றாள். அவன் மனசுக்குள் நினைத்துக் கொண்டான். “அத யாருடி கேட்டது? ஏன் ஆசைக்கு பதிலே சொல்லாம போறியேடி கள்ளி”.............
தொடரும்...
(இப்பகுதி ஒவ்வொரு திங்களன்றும் புதுப்பிக்கப்படும்)
ரவிவர்மன் அவர்களை மின்னஞ்சலில் தொடர்பு கொள்ள: ravivarmannet@gmail.com
|