|
யாவரும் கேளிர் - பகுதி -37-- (ரவிவர்மன், ஒளிப்பதிவாளர்)
சனி இரவு கடந்து ஞாயிறு பிறந்தது. எப்போதும் நகரம் முழுவதும் நத்தைகளாக கார்கள் ஊர்வலம் போகும் சாலையில் அந்த ஞாயிறு அதிகாலையில் அதிவேகத்தில் ஒரு சில கார்கள் மட்டுமே சென்று கொண்டு இருந்தன. சிகாக்கோ நகரத்தில் நதியின் இடையில் தொங்கு பாலத்தில் அந்த ஊர் காக்கா கூட அமைதியாக அமர்ந்திருந்தன. பாலம் கண்களுக்கு எட்டிய தூரம்வரை தெரிந்துகொண்டு இருக்கும்போது பனிப்பொழிவு மறைத்துக்கொண்டு இருந்தன. எங்கேயோ தூரத்தில் வரும் கார் ஒரு சில வினாடிகளில் நம்மை கடந்து போகும்போது தொங்கு பாலத்தின் பதற்றத்தால் நம் காது கிழிந்து தொங்கிவிடுமோ என்று எண்ணும் போது செல்லா குளிரை மறைக்க குரங்கு தொப்பி அணிந்தும் ஆட்டுத்தோலால் நெய்த கம்பளியால் அவனை போர்த்தி முள்ளம்பன்றியாக நடந்து வந்தான்.
அவன் மட்டுமே நடந்து வரும் தொங்கு பாலத்தில் அரிதாவின் எண்ணங்கள் அவனுக்குள் விசாலமாக விழித்திருந்தன. வெளியில் அவனை படர்ந்த குளிரை ஆடையால் வெப்பமாக்கிய போது அவனுக்கு உள்குளிர் நடுக்கியது. உறையணிந்த கையில் தனது பாக்கெட்டுக்குள்ளிருந்து எடுத்து உறை போட்டு போர்த்தியிருந்த விஸ்கி வெங்கலக் குப்பிக்குள் உரைந்து இருந்ததை திறந்து ஊம்பிக்குடித்தான். உடலுக்குள்ளும் ஷ்வெட்டர் உடுத்தி உள்ளுக்குள் உடம்பை கதகதப்பாக்கி அவன் எண்ணங்களில் “அரிதா இப்போது தன்னருகே இருந்தால் இந்த பனி படர்ந்த சூழலில் நான் அருந்திய இதமான வெப்பத்தில் அவளை கட்டியணைத்தால் எவ்வளவு இதமாக இருக்கும்” என்று எண்ணியபோது தொங்கு பாலத்தின் தொலைதூரத்தில் ஏதோ ஒரு உருவம் தெரிந்தன. அதை பார்த்த அவன் இந்த தனிமையில் அது ஒரு பெண்ணாக இருக்கக்கூடாதா என்று எண்ணினான். தொலை தூரத்தை கடத்தி அருகே நெருங்கிய போது அந்த உருவத்தில் பூங்குழல் பறப்பதை கண்டு “ஒ... அவள் பெண்தான்” என்றான். இது அரிதாவாக இருக்கக்கூடாதா என்ற நினைப்பு தப்பிய போது அவளருகே சென்றுவிட்டான். அது அரிதாவேதான் என்று அவளை அவன் கண்டவுடன் அவன் நடப்பது வானத்தில் பறப்பதாக தோன்றியது, அவன் கைகள் மேகத்துக்குள் செல்லும் விமானமாக பறந்தன. ஒரு முறை எகிறி குதித்து பார்த்தான். குதித்தபோது “அய்யோ” என்று கத்தினான். கத்திய போது அரிதா அவனை திரும்பிப்பார்த்தாள். இவன் காலில் இருந்த நகம், அவன் குதித்தபோது தொங்கு பாலத்தில் இருந்த இரும்பு பதம்பார்த்துவிட்டது. வலி எடுத்த வேளையில் அவள் அவனை பார்க்கும் போது அவன் வலியை மறந்துகொண்டு இருந்தான். அவளை பார்த்து “nothing, I am ok” என்றான். அவள் அவனை கண்டுகொள்ளவேயில்லை.
தொங்கு பாலத்தின் கடைசி பாகத்தில் நின்று கொண்டு கீழே சலனமில்லாமல் நதி சென்றுகொண்டு இருந்ததை பார்த்துக்கொண்டிருக்கும் அவளின் கண்களில் இருந்து கண்ணீர் பெருக்கு உடைந்து வழிந்து நதியில் விழுந்துகொண்டு இருந்தன. அதைக்கண்ட செல்லா அவளருகே சென்று அவளையே பார்த்துக்கொண்டிருந்தான். இவனை கண்டும் காணாததுபோல் அவளின் கடைசி வாழ்கை முடிவை இந்த நதியில் குதித்து சில வினாடிகளில் போக்கிக்கொள்ள தீர்மானித்து வினாடிகளை தேடிக்கொண்டு இருந்தாள். அவனுக்கு ஒன்றுமே புரியவில்லை, இவள் ஏன் அழுதுகொண்டு இருக்கிறாள் என்று. அப்பொழுதுதான் அவன் நினைவு திரும்பியது. கடந்துபோன இரவில் இலங்கை தமிழ் பெண்னிடம் “இருப்பதைவிட நான் இறப்பதே மேல்” என்று கூறியது அவள் கேள்விக்கு இங்கே பதிலாக நின்றுகொண்டு இருக்கிறாள் என்று. இவனுக்கு எண்ணங்களில் விபரீதங்கள் பெருகிக்கொண்டு இருந்தன. இவள் ஏதோ தவறான முடிவு எடுக்கப்போகிறாள் எப்படி தடுப்பது என்று எண்ணினான். அதற்காக பலமுறை யோசித்தான் அவளை பார்த்துக்கொண்டே இருந்தான். அவள் கொஞ்சம் கொஞ்சமாக பாலத்தின் கடைசி பாகத்திற்கு சென்று கொண்டிருந்தாள் அப்போதுதான் அவனுக்கு தோன்றியது அவள் அவசர முடிவை எடுத்துவிட்டாள், நாம் நிதானமாக தடுக்க வேண்டும் என்று. ஒருமுறை கண்களை இருக்க மூடினான், கண்கள் திறக்கும்போது அவள் நின்று கொண்டே இருந்தாள்.
இறக்க முடிவெடுத்தும் சாவின் பயம் அவளை தடுத்துக்கொண்டு இருந்தது. அவன் தனக்குதானே தானாகவே வாய்விட்டு பலம் கொண்ட மட்டும் கத்தி சிரித்தான். அவன் சிரிப்பதை அவள் திரும்பி பார்த்த பொழுது அவளின் கால்களால் உடைந்துபோன கடைசி பலகையை தொட்டபோது அந்த பலகை தவறி நதியில் விழுந்த தண்ணீரின் சத்தம் இவனின் புன்னகையை மறைத்த வேளையில் பதற்றமாக தாமும் விழுந்துவிட்டோமா என்று திரும்பினாள். அவள் அந்த பாலத்தின் தடுப்பு வழிப் பாதையை இருக்க பற்றிக்கொண்டு இருந்தாள். அவள் லேசாக நதியை பார்த்தாள் அவள் கால்களால் தட்டப்பட்ட பலகை இறந்து போன சடலம் போல் தண்ணீரில் மிதந்து கொண்டு போயின. அவள் சற்று பயத்துடன் நின்ற இடத்தைவிட்டு கொஞ்சம் பின்னால் நகர்ந்தாள். “என்ன தற்கொலை முயற்சியா?... ரொம்ப நேரம் வெயிட் பண்ணாதீங்க...அப்பறம் ரொம்ப பயமாயிடும்... நீங்க ரொம்ப துணுச்சலான பொண்ணு போல தற்கொலை வரை வந்திருக்கீங்க...
ஆனாங்க தயவு செஞ்சு ஒண்ணுங்க இப்ப குதுச்சு கிதுச்சு செத்துப்போயிடாதீங்க.. நா உங்க கூட நிற்கிறத இந்த பிரிட்ஜ்ல இருக்கிற சிசிடி கேமரால ரிக்கார்டாகிட்டு இருக்கு நீங்கபாட்டுல பொத்துன்னு குதுச்சுட்டு போயிடுவீங்க அப்ப உங்க சாவுக்கு நான் தான் காரணமுன்னு போலீஸ் என்ன பிடிச்சு உள்ள போட்டுரும். என்னங்க, காத்து வாங்க வந்தேன் என் கதையையே முடிச்சுடுவீங்க போலிருக்கு உங்களோட சேர்த்து. அவள் அமைதியாக இருப்பதை பார்த்த செல்லா “என்னங்க எதுவுமே பேசம இருக்குறீங்க. அப்பொழுதும் அவள் அமைதியாக இருந்தாள். “சரியான ஊமக்குசும்பு போல” என அவனுக்குள்ளேயே பேசினான். அவள் லேசாக அவனை திரும்பி பார்த்தாள். அவன் அவள் பார்ப்பதை உணர்ந்தான். மீண்டும் அவளை வெறுப்பேற்ற “ஊமச்சி”போல எனக்கூற அதைக்கேட்டும் அவள் திரும்பாமல் நின்றாள். அவன் அட“செவுடச்சி” என்றான். அவளும் அப்படியே சிலையாக நின்றாள். “சரியான மடச்சி” என்றான். அவளுக்கு கோபம் பொத்துக்கொண்டு வந்தது. அப்பொழுதுதான் அவனை பார்த்து அவசரமாக திரும்பி முறைத்த போது அவள் இருக்க பற்றிக்கொண்டு இருந்த தடுப்புலிருந்து கையை எடுத்து திரும்பிய போது அவர்கள் அருகே 200 மைல் வேகத்தில் ஒரு ஹம்மர் கார் மரப்பாலத்தில் பறந்தன. அந்த பதற்றத்தில் மரப்பாலம் லேசாக குழுங்கியது. நதியிலிருந்து 200 அடியில் தொங்கிக்கொண்டு இருந்த மரப்பாலத்தின் கடைசிப்பகுதியில் நின்று கொண்டிருந்த அரிதா நிலைத்தடுமாறினாள். அப்பொழுது அவனை அறியாமல் கண்களை மூடி “அம்மா...” என்று அலறினான்.
தொடரும்...
(இப்பகுதி ஒவ்வொரு திங்களன்றும் புதுப்பிக்கப்படும்)
ரவிவர்மன் அவர்களை மின்னஞ்சலில் தொடர்பு கொள்ள: ravivarmannet@gmail.com
|