|
யாவரும் கேளிர் - பகுதி - 19 -- (ரவிவர்மன், ஒளிப்பதிவாளர்)
பனிபூண்டார் அவர் வீட்டு முன்பு பிளசர் காரின் முன் கதவு வழியாக குழந்தைக்கான பொம்மை பால்புட்டி கொசுவலை சகிதமாக இறங்க.
பனிபூண்டார் வீட்டின் அருகே வந்து கொண்டு இருக்கும் தனுக்கொடி பனிபூண்டார் கையில் குழந்தை பொருட்களை கண்டு மனதுக்குள்ளே இந்த கிழட்டு பயலுக்கு இனிமே இந்த ஜென்மத்துல கொழந்தையா? டாக்டர்தான் சொன்னாரே இனிமே சான்ஸ்சே இல்லன்னு அத தெரிஞ்சுதானே நான் கோயிலுக்கு அனுப்புச்சேன். இந்த காலத்துல உழைச்சு ஒரு குழி சம்பாதிக்கறது குதிரை கொம்பா இருக்கு. பொண்ணு வெளையிற இடமாச்சே ஆறு ஏக்கர் விடுவேனா அதான் உதவி பண்றமாதிரி செஞ்சுகிட்டுயிருக்கேன், அந்த எடத்த என்ன தவிர வேற எவன் உழுவா...ன் என்று தனக்குள்ளே முனங்கிக்கொண்டே “என்ன அண்ணே கொழந்தை பொறக்குறதுக்குள்ளே எல்லாத்தையும் வாங்கிக்கிட்டு வந்து இருக்கீங்க என்று சிரித்துக்கொண்டே காரின் அருகே வரும்போது குழந்தையுடன் பனிபூண்டார் மனைவி இறங்க, அதை கண்ட தனுக்கொடி பதஷ்டமாக “யார் இந்த கொழந்தை?”அதான் சொன்னியே சனீஸ்வரன கும்பிட்டா கொழந்தை கிடைக்கும்னு... அந்த சாமி கொடுத்த கொழந்தைன்னு” கொழந்தை கிடச்ச விஷயத்த சொன்னாரு, அதக்கேட்ட தனுக்கொடி அதிர்ச்சியுடன் பெரும் ஆவேசமாக யாரு பெத்த கழுதையோ என்ன சாதியோ எதுக்கு எடுத்துக்கிட்டு வந்தீங்க என்று கத்த,
நிதானமாக பனிபூண்டார்,
தனுக்கொடியிடம் எனக்கு கொழந்த பொறக்காதுன்னு தெரிஞ்சும் எனக்கு ஒரு வாரிசு வேணும்னு நீதான சொன்னே... பின்னே... ஆண்சாதி பொண்சாதிய தவிர வேறென்ன சாதி மனுஷனுக்கு?.. மனுஷனுக்கு மட்டுமில்லடா மாட்டுக்கும், ஆட்டுக்கும் அத அறுத்து பாத்தின்னா எல்லாம் ஒரே கலர் ரத்தம்தாண்டா. நாய் பூனைக்கும், பூனை அனிலுக்கும், ஆடு புலிக்குட்டிக்கும், பால் கொடுக்குற இந்த கலியுக காலத்துல என்னடா சாதி... போயி அவென் அவென் வேலைய பாருங்கடா முதல்ல ஒம் முதுவுல இருக்குற அழுக்க உன்னாலயே கழுவ முடியல..ஏன்டா...அடுத்தவன பத்தி பேசுரீங்க ஒங்கம்மா வயித்துல இருந்து வெளியே வந்து நம்ம ஊரைவிட்டு அற பர்லாங்கு தூரம் இருக்குற சுடுகாடுவரை தான்டா வாழ்க்கை... அதுக்குள்ள ஏன்டா நீ நான்னு, எத்தனைபேரு என் காதுல விழுற மாதிரி மலட்டுபய, மலட்டு செரிக்கின்னு இந்த ஊருக்காரங்க பேசுறத எத்தன தடவை கேட்கறது. ஏன்டா எம்.ஜி.ஆரு, காமராஜருக்கெல்லாம் எத்தனை புள்ள குட்டிடா. அவெங்கல்லாம் செத்தும் வாழுறாங்கடா. நீங்க எல்லாம் உயிரோட இருந்தும் செத்த பொணம்டா...இனிமே யார் என்ன சொன்னாலும் சரி.... இதுதான் ஏ..ங் கொழந்த நான் எனக்காக மட்டும்தான் வாழ்றேன்.. இந்த ஊருக்காக இல்ல (என்று தீர்மானமாக சொல்லிவிட்டு) கொழந்தையை ஏ,, சம்சாரம் கொஞ்சும்போது நானும் போயி கொஞ்சுனேன், அதுக்கப்புறம் என் ராஜாவும் மரம்போல நெடுநெடுன்னு வளந்தான்.
அதோட தனுக்கொடியும் கொஞ்சம் கொஞ்சமா சரியாயி என்கூடவும் என் மகன் கூடவும் அன்பா இருந்தான். தனுக்கொடிக்கும் எம்மகனுக்கும் எம்.ஜி.ஆரை ரொம்ப புடிக்கும். எங்க ஊரு காலி கோயில் திருவிழான்னைக்கு எம்.ஜி.ஆர் நடிச்ச 'பாசம்' படம் ஒட்டுனாங்க. எம்.ஜி.ஆர். கடைசி காட்சியில செத்துப்போவாரு (எம்.ஜி.ஆர். இறந்த மாதிரி நடித்த படங்கள் அபூர்வம்) அதப்பாத்துட்டு ஒருத்தனுக்கு ஒருத்தன் கட்டிபிடிச்சு அழுதாங்கெ.. ஊரே வேடிக்கை பாத்துச்சு. அதுக்கப்பறம் ரெண்டுபேரும் ஒன்னும் கண்ணுமா இருந்தாங்க... இதெல்லாம் நடந்து பலவருஷமாச்சு. அதுக்கப்புறம்தான் என் மகன் ஜல்லிக்கட்டுக்போனான்.
திரும்பி வரும்போதுதான் பொணமா வந்ததுதான் ஒங்களுக்கு தெரியுமே. மகன் என்னவிட்டு போன கொஞ்ச நாள்ல சாமிகொடுத்தபுள்ள சாமிகிட்டயேபோச்சுன்னு நானும் ஏ சம்சாரமும் ஆசுவாசப்பட்டப்போ எனக்கு உடம்புக்கு முடியாம டாக்டருகிட்ட போனே..ன். டாக்டர் கேட்டாரு ஒம்மகனை கொலைபண்ணி இவ்வளவு நாளாச்சு இன்னும் யாருன்னு கண்டு பிடிக்களையான்னாரு... எனக்கு கையும் ஒடல காலும் ஒடல திரும்ப நான் டாக்டருகிட்ட
"என்ன டாக்டர் சொல்லுறீங்க எம்மகனை கொலை பண்ணிட்டாங்களான்னு" கேட்டேன் டாக்டர் போஸ்ட்மார்டம் ரிப்போர்ட் அப்படிதானே சொல்லுச்சு. மாட்டு கொம்பால ஆன கத்தியால அதுல விஷம் தடவி குத்தப்பட்டு உயிர் போயிருக்குன்னு... அதான் ஐயா ஒங்க பங்காளி யாரோ தனுக்கொடியாமே அவர்தானே போஸ்ட்மார்டம் ரிப்போர்ட்ல கையெழுத்து போட்டு பாடிய
வாங்கிட்டு போனாரு. போலிஸ்க்குவேற பணத்த கொடுத்து அன்னைக்கு வாயை மூடுனானேய்யா... எனக்கு அவன் மேலேதான்யா சந்தேகமா இருக்குன்னாரு. அதக்கேட்ட எனக்கு ஈரக்கொலையே நடுங்குச்சு... அதே வேகத்துல ஜல்லிக்கட்டு நடந்த இடத்துக்கு போயி விசாரிச்சப்போ... தனுக்கொடி, ஆரான், எம்மவன் மூணுபேரும் ஜல்லிக்கட்டு முடிஞ்சு ஒன்னா இருந்ததா சொன்னாங்க. அதன்பிறகு அவெங்க மேலே எனக்கு சந்தேகம் வந்துச்சு... அவுங்கள தேடிப்போனப்ப நத்தம் கள்ளுக்கடையில கள்ள
திருடிக்கிட்டு காட்டாத்துக்குள்ள போனாங்கெ. நானும் அவெங்களுக்கு தெரியாம அவுங்க பின்னாடியே போனேன். அங்க ஒருத்தனுக்கு ஒருத்தன் போட்டிபோட்டு கள்ளுகுடிச்சுப்புட்டு தங்களோட வியாக்யானத்தை வெளாவாரியா பேசினாங்கெ. அப்பதான் அவெங்க சொல்ல சொல்ல என் ஈரக்கொலையே ஆடிப்போச்சு...
தொடரும்...
(இப்பகுதி ஒவ்வொரு திங்களன்றும் புதுப்பிக்கப்படும்)
ரவிவர்மன் அவர்களை மின்னஞ்சலில் தொடர்பு கொள்ள: ravivarmannet@gmail.com
|