|
யாவரும் கேளிர் - பகுதி - 17 -- (ரவிவர்மன், ஒளிப்பதிவாளர்)
(வேலைப்பளுவின் காரணமாகவும், படப்பிடிப்பு சம்மந்தமாக டெல்லியில் இருப்பதாலும் ரவிவர்மனின் யாவரும் கேளிர் இந்த வாரம் சற்று தாமதமாக (திங்களன்று) வெளியிடப்படுகிறது. காலத்தாமதத்திற்கு வருந்துகிறோம். )
அதுக்குள்ள விஐயதேவரும் அங்க வந்துட்டாரு. அவர் வச்சிருந்த அலக்குக்கம்பால பொரட்டிப் பாத்தப்போ கட்டையில போறவன் எப்பவும் கால்சட்டை போடாம முண்டு உடுத்துவனே சாராயம்காய்ச்சி ஆரான்...னு ஒரு ஆள் தெரிஞ்சிச்சி...
இன்னொரு ஆள் யாருன்னு தெரியல... அதுக்குள்ள போலீஸ் அங்க வந்துடிச்சி.. அப்புறம்தான்
விஷயமே தெரிஞ்சுது... தான் மகன் இறந்தது
ஜல்லிக்கட்டுலதானுன்னு அவர் ஜல்லிக்கட்டு நடந்த
இடத்துக்கு போயிருக்காரு... அந்த இடத்த பாத்துட்டு
வந்து நத்தம் கள்ளுக்கடையில கள்ள குடிச்சிப்புட்டு
காட்டாத்து வழியா வந்திருக்காரு, அப்பதனுக்
கொடியும் ஆரானும் யாருக்கும் தெரியாம
கள்ளுப்பானைய திருடிக்கிட்டு வந்த நீ நானுன்னு
ஒருத்தனுக்கு ஒருத்தன் போட்டிப் போட்டு குடிச்சி இருக்கானுங்க...
போலிஸ் ஸ்டேஷணுக்குள் பனிபூண்டார் செல்கிறார். போலிஸ்காரர்களை பார்த்து எழுந்து
நிற்கும் கைதிகளை பார்த்திருக்கிறோம். ஆனால்
அங்கே பனிபூண்டாரை பார்த்து இன்ஸ்பெக்டர் மற்றும் போலிஸ்காரர்கள் சற்று அதிர்ச்சியுடன் எழுந்து
நிற்கிறார்கள். பனிபூண்டார் எந்த சலனமும்
இல்லாமல் முச்சந்தி அய்யனார் போல் ஒருகையில் முனியப்ப சாமி அருவாளுடன் இன்னொரு
கையில் சாமிக்கு வெட்டப்பட்ட ஆட்டுத்தலைகளின்
கண்கள் விழித்திருக்க அதன் காதுகள் இரண்டையும் ஒன்று சேர்த்துக்கட்டி கையில் பிடித்துக்கொண்டு சந்தைக்குச் செல்வது போல்... இரண்டு பேரின் கழுத்தறுப்பட்ட தலைகளை (தலைகள் மட்டும்) நின்று கொண்டிருக்கும் இன்ஸ்பெக்டர் முன்பு உள்ள மேசை மீது வைத்துவிட்டு என் மகன் இறந்த அன்னைக்கு ஆரம்பிச்ச விரதம் இன்னையோட முடிஞ்சுச்சு... பசிக்குது இன்ஸ்பெக்டர் அதான் வரும்போது ஆட்டுக்கறி பிரியாணி இரண்டு வாங்கிட்டு வந்தேன், எப்படியும் ஜெயில்ல களிதான் திங்கப்போறேன்.
அதான் இந்த சாப்பாடு என்று மேசைமீது
பிரியாணியை வைத்து நாற்காலியில் அமர்ந்து கொண்டு சாப்பிடுகிறார்.
நீங்க எல்லாம் ஏன்
நிக்கிறீங்க, உக்காருங்க சார் என்கிறார். அப்பொழுதுதான் அவர்களுக்கு தாங்கள் போலிஸ்காரர்கள் என்ற ஞாபகம் வந்து ஒருவர் ஓடி விலங்கை
எடுக்க, மற்றவர் வந்து பனிபூண்டார் சாப்பாட்டைப்
பிடுங்க அதைப்பார்த்த இன்ஸ்பெக்டர் விடுங்க அவர் சாப்பிடட்டும் என்கிறார். அதை கேட்ட பனிபூண்டார் என்ன பாத்த ஒரு நிமிஷத்துல ஏமேலே எறக்கப்
படுறீங்களே சார்... (மேசைமீதுள்ள தலைகளை காண்பித்து) இவுங்க... நானும் என் சம்சாரமும்
கல்யாணமாகி அறுபது வருக்ஷமாச்சு சார்... அதற்குள்
அவருக்கு சாப்பாடு விக்கிக் கொள்ள ஒரு போலிஸ்காரர் தண்ணீர் கொண்டுவந்து கொடுக்க அதை வாங்கி குடித்துக்கொண்டே... போலிஸ்காரங்கன்னா
ஊர்மக்க பயப்படுவாங்க ஆனா பாருங்க நான் ஒரு கொலகாரன்னு தெரிஞ்சும் எறக்கபடுறீங்களே நாளைக்கு தூக்குமாட்டி சாவப்போற மனுஷனுக்காக... ஆனா மனுஷனா இருக்க
வேண்டியவன் எல்லாம் பணப் பைத்தியம்புடிச்சு இந்த
மாதிரி முண்டம் ஒரு இடத்துலயும் தலை ஒரு இடத்துலயுமா பொணமா ஆகிடறாங்க சார்.. நான்
என்ன சார் தப்புபண்ணுனேன்.. நானும் என் சம்சாரமும்
போகாத கோயில் இல்ல.. வேண்டாத சாமி இல்ல
சார்.. வரம் வாங்கி தவம் வாங்கி எனக்கு கல்யாணமாகி இருபது வருஷம் கழிச்சு கிடச்சபுள்ள சார்
ஏராஜா...
நானும் என் சம்சாரமும் அவ்வளவு சந்தோஷமா இருந்தோம் சார், எம் பங்காளிங்க
எல்லாரையும் அப்படி மதிப்பான் சார் எம்புள்ள,
ஊருல யாரு என்ன சொன்னாலும் முகம்கோணாம
எம்புள்ள எந்த வேலையா இருந்தாலும் செய்வான் சார். அவனப்போயி இவுங்க கொன்னுப்புட்டாங்களே
சார். அன்னைக்கே என் உசிரும் போச்சு சார், எதுக்கு
சார்?.. என் அஞ்சு ஏக்கர் நிலத்துக்காக சார். நெலத்த
கேட்டுயிருந்தா கொடுத்துருப்பேன் சார், இப்ப நெலம்
இருக்கு சார் எம்புள்ள இல்லாத இந்த உலகத்துல
இவுங்க இருக்கப்படாது அதான் என்று ஆக்ரோஷமாக பாதி சாப்பாட்டுடன் எழுந்து மேசைமீது இருக்கும் தலைகள் மீது எட்டி உதைக்கிறார்.
அதைப்பார்த்து போலிஸ்காரர்கள் அவரை இருக்கி பிடித்து கைகளில் விலங்கு மாட்டுகின்றனர். விலங்கு மாட்டப்பட்ட கையுடன்
அவரை செல்லுக்குள் போலிஸ்காரர்கள் தள்ள
அதைப்பார்த்த இன்ஸ்பெக்டர் போலிஸ்காரர்களைப் பார்த்து அவரை கையில் போட்டிருக்கிற விலங்க அவுத்துவிடுங்க மொதல்ல அவர் சாப்பிட்டு
முடிக்கட்டும் என்கிறார்.. போலிஸ்காரர் அவர்
கையில் உள்ள விலங்கை அவுத்தவுடன்
அவரை இன்ஸ்பெக்டர் அழைத்து வந்து அவர் ஏற்கனுவே அமர்ந்த சேரில் அமரவைத்து சாப்பிடுங்க
பெரியவரே என்கிறார். அவர் கண்கலங்கிக்கொண்டே
முடியல சார் அவன் ஆசையா வாங்கி கொடுத்த ஆட்டுக்கறி வேகறதுக்குள்ள அந்த பச்சை உடம்பு வெந்து போச்சே சார், என்னால சாப்பிட முடியல
சார், இன்ஸ்பெக்டர் சரி நடந்தத சொல்லுங்க......
அஞ்சறிவு படைச்ச முருகங்ககூட பழிக்குப்பழி வாங்கனும்னு அதுங்குளுக்குள்ள, அதாவது
சிங்கம் சிங்கத்தையோ அல்லது புலி புலியையோ
அடித்துக் கொல்வதில்ல. ஆனா ஆறறிவு
படைச்ச மனுசன் பழியுணர்ச்சியில கொல பண்ணிக்கறான். பகுத்தறிவு என்பது பழிக்குப்பழி
வாங்கறதுக்குதான் பயன்படுதோ என்னவோ!
மேலும் ஒரு மிருகத்து பால அந்த இனத்த சேர்ந்த
இன்னொரு மிருகம் குடிக்கறதில்ல. ஆனா
மனுசன் மட்டும்தான் எல்லா மிருகத்து பாலயும் உறிஞ்சிக் குடிக்கிறான். ஒருவேள
மனுசனுக்குள்ள மிருககுணத்தையும், மிருகத்துக்குள்ள மனுசகுணத்தையும் ஆண்டவன் மாத்திப்
படைச்சிட்டானோ தெரியல. தண்ணிக்குள்ள தவறிவிழுந்தவன காப்பாத்தி கரைக்குக் கொண்டுவந்து சேர்க்கிற டால்பின் மீனையும் பார்க்கிறோம்;
தண்ணிக்குள்ள தலைய அமுக்கிக் கொலசெய்யிற
மனுஷனையும் பார்க்கிறோம்.ம்... ஆறாவது அறிவாம்
பகுத்தறிவு பாபாத்திங்களா?!... வெட்கக்கேடு...
அதற்குள் போலிஸ்காரர் இன்ஸ்பெக்டர் காதில், "விட்டா நாம படிக்காத ராமாயணத்தையும்,
மகாபாரதத்தையும் நமக்கு கதைகதையா
சொல்லுவான் சார்... இன்ஸ்பெக்டர் போலிஸ் காரரை
சற்று கடுகடுத்த முகத்துடன் திரும்பிப் பார்க்க, "எஸ் சார்" என்று சல்யுட் அடித்துவிட்டு போலிஸ்காரர், பனிபூண்டாரிடம் "ம்...ஜெயிலுக்குள்ள
போணபிறகு நாள்கணக்கா பேசலாம்" அதற்குள்
இன்ஸ்பெக்டர் குறுக்கிட்டு இதெல்லாம் அப்புறமா பேசிக்கலாம்.... இன்னைக்கு என்ன நடந்தது அதைச்
சொல்லுங்க...." "ஆரம்பத்தில் இருந்து சொல்றேன் சார்" போலிஸ்காரர் குறுக்கிட்டு "இன்னைக்கி
நடந்தத சொல்லுய்யா...." இன்ஸ்பெக்டர் போலிஸ்
காரன் காதில்..."மொதல்ல அவன சொல்லவுடுய்யா,
அவன் முழுசா சொல்லலேன்னா, அப்புறம்
நீயும் நானும் இந்த கேச தூக்கிக்கிட்டு கிராமம்
கிராமமா அலையனும்யா... ஒருபயலும் உண்மைய
சொல்லமாட்டானுவ, அவ அவன் விடற கதையகேட்டு நமக்குதான் பைத்தியம் பிடிக்கும்,
அப்புறம் எது உண்மைன்னு தெரியாம தவிக்கனும், சரி.... பெரியவரே நீங்க சொல்லுங்க... நடந்ததை
விவரிக்கிறார்...
தொடரும்...
(இப்பகுதி ஒவ்வொரு திங்களன்றும் புதுப்பிக்கப்படும்)
ரவிவர்மன் அவர்களை மின்னஞ்சலில் தொடர்பு கொள்ள: ravivarmannet@gmail.com
|