|
யாவரும் கேளிர் - பகுதி - 10 -- (ரவிவர்மன், ஒளிப்பதிவாளர்)
கிராமத்தில் கலவரமும் மழையும் ஒய்ந்தது. தொடர்ந்து பெய்த அடைமழையால் நனைந்த பயிர் பச்சைகள் சூரிய வெளிச்சத்தைக்காண ஆவலோடு காத்துக் கிடக்கின்றன.மழைக்கு பயந்து கிடந்த கதிர்கள் சூரியவெளிச்சமும் தலைகாட்ட ஆரம்பித்தவுடன். நெற்பயிர்களும் கழுத்துக்குள் வைத்திருந்த கதிர்களை வெளியில் தள்ளிக்கொண்டு இருக்கிறது. வயல்களுக்கு நடுவிலிருந்த களத்துமேட்டில் ஆள் உயரத்துக்கு அருகம்புல் பல வளர்ந்து மழையில் நனைந்து பள பளத்துக்கொண்டு கிடக்கிறது. ஒத்தயாள் நடந்து செல்லும் வரப்பில் செல்லப்பா முன்னும் மச்சக்காளை பின்னுமாக போக, “ இந்த பயிரையெல்லாம் மேஞ்சுடாதே இது எங்களப்போல மனுசங்க சாப்பிட உரம்போட்டு அவசரமா வளர்த்தது.
கொர மாசத்துல பொறக்கபோற குழந்தை மாதிரி இந்தப் பயிறு.. இத நீ சாப்பிட்டா எங்களுக்கு வர்ரமாதிரி பேர் சொல்லமுடியாத வியாதியெல்லாம் உனக்கும் வந்து கஷ்டப்படுவே. அதனால இது உனக்கு வேணாம். இதோ இயற்கையா வளந்துக்கெடக்கிற அருகம்புல்தான் உன் ஒடம்புக்கு நல்லது. இத சாப்பிட்டா உன் ஒடம்புக்கு ஒரு வியாதியும் வராது. இப்பவெல்லாம் பட்டணத்தில உடல் உழைப்பு இல்லாம அளவுக்கு அதிகமா வயிருமுட்ட சாப்புட்டு கன்டநேரத்துல தூங்கினதால ரத்தகொதிப்பு சக்கரை வியாதியெல்லாம் வந்து இருவது வயசுல மாறடைப்பு வருதாம் அதனால அருகம்புல்சாறு குடிக்கறது பேஷனா போயிடிச்சி(வழக்கமாயிடிச்சி)-ன்னு எங்க வாத்தியாரு சொன்னாரு. சீக்கிரா வா போய் சாப்பிடலாம். நல்லவேள அருகம்புல் அருமையெல்லாம் இன்னும் எங்க ஊர்ல யாருக்கும் தெரியாது. அதனால தப்பிச்சிடிச்சு” என்று சொல்லிக்கொண்டே களத்துமேட்டுக்கு மாட்டை ஒட்டிக்கொண்டு செல்கிறான் செல்லப்பா. மச்சக்காளையும் ஆசையா அருகம்புல்ல தின்னுகிற அழகை அவன் ரசித்துப் பார்க்கிறான். அருகம்புல்லின் அடியில் முட்டையிட்டு அடைகாக்கும் ஒரு நல்லபாம்பு தனக்கு ஆபத்து வந்துகொண்டுருக்கிறது என்று, மேய்ந்துக்கொண்டே தன்னருகில் வந்த மச்சக்காளையைப் பார்த்து சீற ஒருபர்லாங் தூரம் மூச்சிரைக்க ஒடி தாமரைக்குளத்தருகில் வந்து நின்று கொண்டது. நல்ல பாம்பும் தனக்கு வந்த ஆபத்து ஓய்ந்தது என்று தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டு முட்டையை அடைகாத்துக்கொண்டது.
கூடவே ஒடிவந்த செல்லப்பா கீழே விழுந்து கைகால்களில் சிராய்ப்பு எற்பட்டு கொட்டும் இரத்தத்தை தாமரை ஏரி தண்ணீரில் கழுவிக்கொண்டு .கரையேறும்போது உடம்பெல்லாம் ஒரேவலியால் நடக்க தெம்பில்லாமல் அசந்து உட்கார்ந்துக் கொள்கிறான்.சிராயிப்பு ஏற்ப்பட்ட இடத்தில் வலிபொருக்கமுடியாமல் மண்னை வாரி தடவிக்கொள்கிரான் மச்சக்காளை அவனருகில் வந்து அடிபட்ட இடத்தையெல்லாம் தன் நாக்கால் நக்கிக்கொடுத்தும்,வாலால் இதமாகா உராய்ந்துக்கொடுத்தும்,தன் தலையை மெல்ல ஆட்டிக்கொண்டும் இருக்க, செல்லப்பாவும் அதன் தாடையை வருடிக்கொடுக்கிறான். மச்சக்காளையும் அவனருகில் படுத்துக்கொள்ள, அவனும் அதன்மீது சாய்ந்துக் கொள்கிறான்.அவனுக்கு ஏனோ அதே இடத்தில் தூங்க வேண்டும்போல மிகவும் அசதியாக இருக்க, மழைபெய்து கீழே சேறாக இருந்ததால் மாட்டின்மீதேறி படுத்துக்கொள்கிறான். சிறிதுநேரம் கழித்து மச்சக்காளையும் எழுந்து நடக்க, செல்லப்பாவும் மெல்ல எழுந்து உட்காருகிறான்.
இப்போது தான் ஒரு குதிரை மீதேறி போருக்குச் செல்லும் வீரனைப்போல் பெருமிதம் கொள்கிறான். கைதொடும் தூரத்திலிருந்த மச்சக்காளையின் மச்சத்தை இலேசாகத் தொட, மதம்கொண்ட யானை பிளிறுவதுபோல அது சிலிர்த்துஅவனை தூக்கியெறிய சாலையோறத்து கள்ளிச்செடிமேல் விழுந்துக் கிடக்கிறான்.
தீபாவளிக்கு ரீ ரிலீஸான (மறு வெளியீடு) சகலகலாவல்லவன் படம் பாப்பாநாடு சாமியில 50- நாள்ஓடி இன்னைக்கி கடைசிநாள் ஒடிக்கிட்டிருக்கு. அதப்பாத்துட்டு அப்படியே போய் ஒரத்தநாடு ரத்னாவுல யாரோ புதுநடிகராம் பாண்டியராஜன் குடுத்த ஆண்பாவம்னு நல்ல ஜோக்கா இருக்காம், அதையும் பாத்துட்டு வந்திடலாம்...”மச்சான் என்றபடி நரசிம்மனும்,கொளந்தசாமியும் ஒன்றாக கொளந்தசாமி பைக்கை ஒட்ட,நரசிம்மன் பின்னால் அமர்ந்தும் செல்கின்றனர். அறுவடைகாலம் தொடங்கிவிட்டது...ஆளில்லாம ஈ ஓட்டிக்கொண்டு இருந்த தனுக்கொடி கடையில காக்கா கூட்டம்போல் அலைமோதுகிறது கிராமத்து மக்கள் கூட்டம். தனுக்கொடியும் இதுதான் சமயம்னு ரெண்டுலிட்டர் பால்ல மூன்று லிட்டர் வடிதண்ணீரையும் நான்கு லிட்டர் வெண்ணீரையும் கலந்து தனுக்கொடி டீ ஆத்த வேலாயி டீயை வாங்கிகுடிக்கம்போது டீ என்ன இன்னக்கி வேறமாரி இருக்கே? அதுஒன்னுயில்ல பசும்பாலு கெடைக்காம எருமைப்பாலு, அதான்!
தொடரும்...
(இப்பகுதி ஒவ்வொரு திங்களன்றும் புதுப்பிக்கப்படும்)
ரவிவர்மன் அவர்களை மின்னஞ்சலில் தொடர்பு கொள்ள: ravivarmannet@gmail.com
|