படம்: தாகம்
நடிப்பு: அஸ்வந்த், சுரேஷ்
ஒளிப்பதிவு: ஜோதிராஜ்
படத்தொகுப்பு: ரியாஸ்
தயாரிப்பு: லட்சுமிக்கண்ணு
எழுத்து & இயக்கம்: ரமேஷ் சின்னக்கண்ணு
நேரம்: 12 நிமிடம் 30 நொடிகள்
ஆட்டயாம்பட்டியை சேர்ந்த மாணவன் வேலன். பள்ளிக்கூடத்தில் உள்ள மற்ற மாணவர்களைக் காட்டிலும் படிப்பில் புத்திசாலியாகத் திகழ்கிறான் வேலன். பள்ளியில் நடக்கும் அனைத்துப் போட்டிகளிலும் முதல் பரிசை வென்று, கம்பீரமாய் நிற்கும் வேளையில் "டேய் வேலா போய் இந்த 'டீ' யக் கொடுத்துட்டு வாடா, இந்த நேரத்துல என்னடாக் கனவு" என்று அதட்டுகிறார் முதலாளி. ஒரு சிறுவனின் கல்விக் கனவை அழகாக வெளிப்படுத்தியுள்ளார் இயக்குனர்.
நடிப்பு:
வேலனாக நடித்திருக்கும் சிறுவன் அஸ்வந்த் ஒருவித சோகத்துடன் கூடிய முகத்துடனேயே நடித்திருப்பது அழகு. சிறுவனைத் தவிர மற்ற யாருடைய நடிப்பும் நினைவில் நிற்கவில்லை. ஆனால் பள்ளியின் தலைமையாசிரியராக நடித்திருக்கும் (அவர் உண்மையிலேயே தலைமையாசிரியர்தான்.) திரு. முத்துக் குமரேசன் நல்ல நடிகராக வரும் வாய்ப்புகள் அதிகம். அவரது முக அமைப்பு பல கதாப்பாத்திரங்களை உள்வாங்கி நடிக்கும் தோற்றத்தை பெற்றுள்ளது. அவருக்கு வாழ்த்துகள்.
ஒளிப்பதிவு:
குறும்படம் என்பதே இருப்பதை கொண்டு சொல்ல வந்த கருத்தை நேர்மையாக, நேர்த்தியாக சொல்வதே. அந்த வகையில் இக்குறும்படத்தின் ஒளிப்பதிவாளர் திரு. ஜோதிராஜ் அவர்கள் கோணங்களை (Angles) அழகாகக் கையாண்டுள்ளார். ஆனால் zoom in, zoom out ஷாட்களை தேவையில்லாத idangalil உபயோகிப்பதை தவிர்க்கலாம். தொடர் பயிற்சியின் மூலம் மட்டுமே எந்த ஒருக் கலைஞனுமே உச்சத்தை தொட முடியும். தொடர்ந்து பயிற்சி செய்யுங்கள், பயிலுங்கள்... ஏணிகள் உங்களைத் தேடி வரும்.
படத்தொகுப்பு:
தன்னால் முடிந்த வரை படத்தின் பல பகுதிகளில் புகுந்து விளையாடி இருக்கிறார் இக்குறும்படத்தின் படத்தொகுப்பாளர் திரு. ரியாஸ் அவர்கள் குறிப்பாக சிறுவன் தொடர்ந்து படிப்பதாகக் காட்டும் ஷாட்கள். படிக்கட்டுகளில் சிறுவன் தவழ்வதும், மரத்தடிக்கு மாறுவதும் அழகு. ஆனால் ஒரு சில காட்சிகள் தேவையில்லை என்று இயக்குனருக்கு சுட்டிகாட்ட வேண்டிய கடமை படத்தொகுப்பாளருக்கு உள்ளது. உதாரணமாக முதல் காட்சி: பள்ளியில் ஆசிரியர் பாடம் நடத்துவது. நீண்ட நேரம் வகுப்பறைக் காட்சிகள் படத்தின் வேகத்தை குறைக்கிறது. இன்னும் வெட்டி ஒட்டி இருக்கலாம்.
இசை:
படத்திற்கு இசையமைப்பாளர் இல்லை. புதிதாக குறும்பட எடுக்க வரும் ஆர்வலர்கள் கவனத்திற்கு. நீங்கள் உலகத் தரத்திலான குறும்பட எடுத்தாலும் அதில் மற்ற திரைப்படங்களின் இசையோ, அல்லது புகழ் பெற்ற இசைத் தொகுப்புகளையோ பயன் படுத்தினால் உங்கள் குறும்படம் போட்டிகளில் பங்கேற்கும் வாய்ப்பை இழக்கும். குறும்பட ஆர்வலர்களின் பொருளாதார சிக்கலை ஈடுகட்டுவதே இந்த விருதுகள்தான். எனவே இசைக்காகவும் கொஞ்சம் மெனக்கெடுங்கள்.
இயக்கம்:
பல களங்கள் இருக்கும்போது படிப்பின் மீது உள்ள தாகத்தை உணர்த்த இயக்குனர் திரு. ரமேஷ் சின்னக்கண்ணு முனைதிருப்பது பாராட்டப்பட வேண்டிய ஒன்று. ஒரு சிலருக்கு தங்களின் பள்ளி வாழ்க்கையை நினைவுபடுத்தும் விதமாக காட்சிகள் அமைந்திருப்பது சிறப்பு. அதுதானே இயக்குனரின் வெற்றி. சிறுவன் கனவு காண்கிறான் என்று கடைசியில் சொல்லி இருப்பது சிறப்பு. அனைவரையும் ஒருங்கினைத்திருக்கும் இயக்குனரின் உழைப்பு பாராட்டப்பட வேண்டிய ஒன்று. தொடர்ந்து இயங்குங்கள்... தொடர்ந்து இயக்குங்கள்.. இயக்குனர் ரமேஷ் சின்னக்கண்ணு குறும்பட உலகிற்கு மேலும் ஒரு நல்வரவு.
யார் என்ன சொல்கிறார்கள்?
சிறுவர்கள் (5-15): நல்ல இருக்கு.
இளைஞர்கள் (16-30): இன்னும் கொஞ்சம் சிறப்ப எடுத்திருக்கலாம்.
நடு வயதுக்காரர்கள் (31-50): கொஞ்சம் இழுவையா இருக்குங்க..
பெரியவர்கள் (51-...): அருமையா இருக்குப்பா.
(அடைப்புக் குறிக்குள் வயது குறிப்பிடப்பட்டுள்ளது).
மொத்தத்தில்:
பள்ளிக்கூடங்களில் மாணவர்களை அடிக்கக் கூடாது என்று அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் இக்குறும்படத்தில் ஆசிரியர் மாணவரை பிரம்பால் அடிக்கிறார். குறும்படங்கள் நல்ல பதிவுகளாக அமையும் ரமேஷ். எனவே இது போன்ற குறைகளை தவிர்த்து விடுங்கள். மேலும் ஜனரஞ்சக திரைப்படங்களில் தவறுகள் ஏற்பட்டாலே இயக்குனர்தான் பொறுப்பு என்கிற வேலையில் குறும்படங்களில் ஏற்படும் அனைத்து தவறுகளுக்கும் அதன் இயக்குனரே முழுப்பொறுப்பு. இக்குறும்படத்தில் நடித்திருக்கும் அனைவருமே ஒருவித செயற்கைத் தனத்துடனேயே நடித்திருக்கிறார்கள். பின்னணியில் மாணவர்கள் கேமராவையேப் பார்ப்பது, மாணவன் சீரியசாகப் படிக்கும்போது ஆசிரியர்கள் நகைப்பது, என்று அஆங்காங்கே தென்படும் சிறு சிறு குறைகள், இறுதியில் தலைமையாசிரியரே கேமராவைப் பார்த்து பேசுவது என குறைகள் தென்பட்டாலும் இயக்குனரின் முயற்சி பாராட்டுக்குரியது.
பதிவுகள்:
பள்ளிக்கூடங்களில் மாணவர்கள் தமிழ்த்தாய் வாழ்த்து, தேசிய கீதம், உறுதிமொழி போன்றவற்றை படித்து விட்டு வகுப்பறையில் சென்று வகுப்பறையிலும் ஒரு வாழ்த்து படிப்பது என்பு நடைமுறை. ஆனால் சென்னை போன்ற மாவட்டங்களில் அது எப்போதோ காலாவதியாகிவிட்டது. வகுப்பறை கீதத்தை மீண்டும் நினைவுப்படுத்துகிறது இந்தப் படம்.
குறிப்பு: "படிப்பில ஆர்வம் இல்லாத மாணவர்கள் படிக்காத தற்குறிகளாக உருவாவதையே ஏற்க முடியாது. அப்படி இருக்கையில் ஆர்வம் இருந்தும் குடும்ப வறுமை காரணமாக சிறுவர்கள் படிக்க முடியாமல் போவது என்பது கொடூரத்தின் உச்சம். அரசாங்கம் என்ன செய்துக் கொண்டிருக்கிறது என்ற கேள்வியை மட்டுமே நம்முன் எழுப்புகிறது இந்தப் படம்.
---------------------------------------------------------------------------------------------------------------------------- |