 |
இவரது இயற் பெயர் துளசி. கணவர் கோபால் மிகப்பெரிய பன்னாட்டு நிறுவனத்தில் உயரதிகாரி. கணவருடன் 6 வருடம் பிஜி தீவுகளிலும் கடந்த 22 வருடமாக நியூஸிலாந்திலும் வசித்து வருபவர். நியூஸிலாந்தின் குடியுரிமையும் பெற்ற இவர் தமிழை மறக்காமல் கடந்த 5 வருடங்களாக பிளாக் எழுதி வருகிறார். மத்திய கிழக்கு நாடுகள் தவிர இவர் சுற்றாத ஊரும் நாடும் இந்த பூமியில் இல்லை என்றால் அது மிகையில்லை. கேமிரா கையோடு கிளம்பி தான் பார்த்த இடங்கள் சந்தித்த மனிதர்கள் என்று ஒன்று விடாமல் அனைத்தையும் தன் தளத்தில் பதிவாக சும்மா பதித்து தள்ளியுள்ளார். இல்லத்தரசியா என்று கேட்டதற்கு I am a home executive என்கிறார் பெருமிதத்தோடு. |
திருமதி. துளசியின் வாசிப்பு மற்றும் இசை அனுபவங்கள் பற்றி கேட்டதற்கு:
பல வருடங்களாகத் தமிழ்ப் புத்தகங்கள் கிடைக்காத ஒரு இடத்தில் காய்ஞ்சுபோய்க் கிடந்தேன். இப்போதான் சென்னைப் பயணத்தில் கொஞ்சம் புத்தகங்கள் வாங்கிப் படிக்க ஆரம்பித்திருக்கிறேன்.
தற்சமயம் என்னை வாசிப்பு என்ற மீளாக் கடலில் அமிழ்த்தியிருக்கும் சில எழுத்தாளர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் ஜெயமோகன், எஸ்.ரா. பழையவைகளில் தி.ஜானகிராமன், லா.ச.ரா. இடைப்பட்டக் காலத்து சுஜாதா, இப்படித்தான் வாசிப்பு நடந்துகொண்டிருக்கிறது. 'ரதிப்பெண்கள் திரியும் அங்காடிவீதி' யைத் தலைப்புக்காகவே வாங்கிய காலம் உண்டு. என்கிறார்.
இசையிலும் இவருக்கு ஈடுபாடு உண்டு. ஆனால் இசையைப் பொறுத்தரை இரைச்சல் இல்லாத, பாட்டின் சொற்கள் தெளிவாகப்புரியும் விதம் பாடப்பட்டவைகள் தனக்கு பிடிக்கும் என்கிறார். இன்றும் அன்றும் என்றுமாய் ரசிப்பது எம் எஸ், அம்மாவின் இனியகுரலின் இசையை பெரிதும் விரும்புகிறார்.
கர்நாடக இசை, வட இந்திய இசைன்னு பேதமெல்லாம் பார்க்கறதில்லை. சிதார், தப்லா, சாரங்கி ஷெனாய், புல்லாங்குழல், வீணை என்று எல்லாவித இசைகளையும் விரும்பி கேட்பாராம்.
மெல்லிய பழைய இசை எனக்கு உயிர் என்கிறார். அதுக்காக பழைய பஞ்சாங்கம் இல்லை. லேட்டஸ்ட் பாட்டும் பிடிக்கும். வைரமுத்துவின் வைரவரிகளின் விஜய் ஆண்ட்டனியின் நெஞ்சாங்கூட்டில் நீயே நிற்கிறாய்... பாடலை எத்தனை தடவை கேட்டிருப்பேன் என்பது எனக்கே தெரியாது என்கிறார்.
வலையுலகமே இவரது உலகமாய் இருக்கிறது. வலையுலகம் பற்றி கேட்டபோது: முகம் காணாத நட்பு. உதவி தேவைப்படும்போது உலகமெங்கும் நீளும் கரங்கள் என்று அனைவரையும் மகிழ்ச்சியோடு நினைவு கூறுகிறார். ஆமாம் இவரின் சிங்கப்பூர் பயண பதிவுகளை படித்தால் இது உங்களுக்கே புரியும். ஆனால் வலையுலகில் தேவையில்லாதச் சர்ச்சைகள். எதிர் அணியினருக்கும் ஒரு கருத்து இருக்கும் என்பதை நம்ப மறுத்து 'முயலுக்கு ரெண்டே கால்' னு பிடிவாதம் பிடிக்கும் சில இடுகைகளும் இங்கேயும் சாதி பற்றி எழுதுவது தமக்கு வருத்தம் அளிப்பதாக நொந்து கொள்கிறார்.
ஆனாலும் பொதுவாக நகைச்சுவை, பயணம், அனுபவம் பற்றிய பதிவுகள் விரும்பி படிப்பாராம். தலைப்பு, உள்ளே ஈர்க்கும் விதம் இருந்தால் எட்டிப் பார்க்கவும் தயங்க மாட்டாராம்.
தன் பயண கட்டுரைகள், அனுபவங்கள், நண்பர்கள், குறு நாவல் என்று இதுவரை 900 பதிவுகளுக்கு மேல் எழுதி வரும் இவர் ஒவ்வொரு பதிவிற்கும் வித விதமான புகைப்படங்களையும் இட்டு நாம் நேரில் காண இயலாத இடங்களையும் தனக்கே உரிய இயல்பான நடையில் விவரித்து பதிய வைத்திருப்பது மிகவும் சிறப்பு.
எழுத்தாளர் சுஜாதாவின் ‘பிரிவோம் சந்திப்போம்” வெளியான நேரத்தில் தனக்கு மகள் பிறந்ததால் அதில் வரும் கேரக்டரை விரும்பி தன் மகளுக்கு “மதுமிதா” என்று பெயர் சூட்டியுள்ளார். 26வயதான மதுமிதா நியூஸிலாந்தில் வசித்து வர தற்காலிகமாக இப்போது சென்னையில் வசிக்கிறார் துளசி கோபால். வலையுலகில் இவருக்கு துளசியம்மா என்று மரியாதை பெயரும் வகுப்புகள் போல பதிவுகளை பதியவைப்பதால் துளசி டீச்சர் என்ற செல்ல பெயரும் உண்டு.
தமிழ் வலைத்தளங்களின் வருங்காலம் அமோகமாக இருக்கும் என்று கூறும் திருமதி. துளசியின் எதிர்காலமும் வளம் செழிக்க தமிழ் ஸ்டுடியோ.காம் மனதார வாழ்த்துகிறது.
வலைதளம் அறிமுகம் பகுதியில் முதலில் ( Always Ladies First ) இவரது வலைதளத்தை அறிமுகப்படுத்துவதில் தமிழ் ஸ்டுடியோ.காம் மிக்க மகிழ்ச்சியடைகிறது.
விரைவில் ஆயிரம் பதிவுகளை தொட இருக்கும் இவரது வலையின் முகவரி:
மின்னஞ்சல் தொடர்புக்கு
|