கல்வெட்டு ஆய்வில் புகழ்பெற்ற திரு. ஐராவதம் மஹாதேவன் அவர்களுக்கு வரலாறு.காம் நடத்திய விழாவில் கேட்க நேர்ந்தது. தமிழ்நாட்டில் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு கண்டு எடுக்கப்பட்ட கல்வெட்டுகள் இன்னும் மைசூர் நகரிலேயே இருப்பத்தாக ஒரு செய்தி. மேலும் சங்கக்கால தமிழர்கள் சிறந்த படிப்பறிவுடன் விளங்கினார்கள் என்பதற்கு சான்றாக வீட்டில் பயன்படுத்தப்படும் பானைகளில் எழுதி வைக்கப்பட்டு இருக்கும் குறிப்புகள் பெரிதும் உதவியாக இருந்தாகவும் மஹாதேவன் அவர்கள் குறிப்பிட்டு பேசி இருந்தார். ஏன் தமிழர்கள் மட்டும் தங்கள் பூர்விகம் மற்றும் ஆவணங்கள் பற்றி
கவலைப்படாமலேயே வாழ்கின்றனர் என்ற கேள்விக்கு இன்னும் பதில் இல்லை.
ஆட்சியாளர்களும் அது பற்றி பெரிதாக கவலைப் பட்டதாக தெரியவில்லை. இது பற்றி பேசினால் பல அத்தியாயங்கள் எழுத வேண்டி இருக்கும். நாம் இந்த ஊர் சுற்றலாம் வாங்க பகுதிக்கு வருவோம்.
சாதரணமாக நண்பர்கள் தங்களுக்குள் ஏற்பாடு செய்து செல்லும் சுற்றுலா போன்றே இங்கும் நாம் இணைந்து சுற்றுலா ஏற்பாடு செய்யப் போகிறோம். ஆனால் இந்த சுற்றுலாவில் தமிழர்கள் இழந்த அடையாளங்கள், பாதுக்கக் மறந்த ஆவணங்கள், மற்றும் கல்வெட்டு பற்றிய ஆய்வுகள் போன்றவற்றை மேற்கொள்ளப் போகிறோம். ஆனால் இச்சுற்றுலாவில் ஒரு ஊரை தெரிவு செய்து அவ்வூரை அலசி ஆராய்ந்து அனைத்து ஆவணங்களும் சேகரித்தப் பின்பே மற்றொரு ஊர் தெரிவு செய்யப்படும். எனவே ஒரு ஊரின் அனைத்து ஆவணங்களும், சேகரிக்கப்பட பல்வேறு கட்ட சுற்றுலாக்கள் செல்ல வேண்டிய அவசியமாகிறது. எனவே ஒரு ஊரின் முதல் கட்ட சுற்றுலாவில் பங்கேற்ற நண்பர்கள் குழு தொடர்ந்து அனைத்துக்கட்ட சுற்றுலாவுக்கும், தங்கள் பங்களிப்பை உறுதி செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
ஆய்வில் தொகுக்கப்படும் செய்திகள், கட்டுரைகள் பின்னர் புத்தகமாக தமிழ் ஸ்டுடியோ வெளியிடும். விற்பனையில் கிடைக்கும் பணம், அந்த ஆய்வில் பங்கேற்ற அனைத்து நண்பர்களுக்கும் சமமாக பகிர்வு செய்யப்படும். ஆய்வுகள் முடித்தப் பின்னர் இது பற்றி விரிவாக பேசி முடிக்கலாம்.
அதற்காக ஏற்பாடு செய்யப்பட்டதே இந்த ஊர் சுற்றலாம் வாங்க பகுதி. இங்கு தமிழ் ஸ்டுடியோவால் அறிவிக்கப்படும் இடத்திற்கு மேற்சொன்ன ஆய்வுகள் நடத்த விருப்பம் உள்ள நண்பர்கள் தங்களையும் இணைத்துக் கொள்ளலாம். சுற்றுலாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தமிழ் ஸ்டுடியோ மேற்கொள்ளும். ஆனால் தமிழ் ஸ்டுடியோ இலாப நோக்கமற்ற ஓர் நிறுவனம். ஸ்டுடியோவின் தளத்தை பராமரிக்கவே எங்களிடம் போதிய நிதி வசதி இல்லாக் காரணத்தால் இது போன்ற சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்த எங்களால் நிதி ஒதுக்க இயலவில்லை. எனவே இச்சுற்றுலாவில் பங்குபெறும் நண்பர்கள் தங்களுக்கு தேவையான தொகை மற்றும், போக்குவரத்து, உணவு, தங்குமிடம் போன்றவற்றிற்கான தொகையையும் தாங்களே கொண்டு வரவேண்டும். தமிழ் ஸ்டுடியோ நிர்வாகம், அதற்கான ஏற்பாடுகளை மட்டுமே மேற்கொள்ளும்.
பிற்காலத்தில் தமிழ் ஸ்டுடியோ நிர்வாகமே இத்தகைய நிகழ்ச்சிகளுக்கு போதுமான தொகை ஒதுக்கும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம். எனவே முதற் கட்ட சுற்றுலாக்களுக்கு நண்பர்கள் தங்கள் ஆதரவை அளித்து இச்சுற்றுலாவை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். முதல் சுற்றுலாவுக்கான இடம் மற்றும் தேதி பின்னர் அறிவிக்கப்படும். இது சம்பந்தமான தங்கள் கருத்துகளை மற்றும் தங்கள் பங்கேற்பு குறித்த செய்திகளை கீழ்கண்ட மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
editor@thamizhstudio.com
|