விளையாட்டுகள்
 |
ஒரு நாட்டின் இயற்கை அமைப்பையும் சூழ்நிலையையும் பழக்க வழக்கங்களையும் பொறுத்து வேறுபட்டு அமையும் விளையாட்டு களிலிருந்து அந்நாட்டுச் சமூக வாழ்வு பற்றியும் அறிந்து கொள்ளலாம். எனவே தமிழர்களுக்குரிய நாட்டுப்புற விளையாட்டுகள் பற்றி அறிவதன் மூலம் தமிழர் வாழ்வியலை அறியலாம். விளையாட்டுகள் பொழுது போக்காகவும், மரபு தொடர்ச்சியாகவும், நம்பிக்கை சார்ந்ததாகவும், உடல் மற்றும் அறிவுத் திறன் வளர்ச்சிக்காவும், பிறர் கண்டு மகிழ்வதற்காகவும் ஆடப்படுகின்றன.
|
பழந்தமிழர் விளையாட்டுகள்
பல பழந்தமிழர் விளையாட்டுகள் இன்றளவும் விளையாடப் பெறுகின்றன. அவற்றில் இன்று விளையாடப் பெறாத சில விளையாட்டுகள் (புனல் விளையாட்டு, பொழில் விளையாட்டு,
பந்தாட்டம், ஊஞ்சல், மல்லாட்டம், கழைக்கூத்து, வல்லாட்டம்) இங்கே குறிப்பிடப்படுகின்றன.
ஆடவர் விளையாட்டுகள் :
ஆடவர் விளையாட்டுகள் பெரும்பாலும் புறவிளையாட்டுகளாகவே (outdoor games) உள்ளன. ஜல்லிக்கட்டு, பாரிவேட்டை, சிலம்பம், புலிவேடம், சடுகுடு, இளவட்டக்கல், ஓட்டம், இரட்டை மாட்டுப் பந்தயம், மோடி விளையாட்டு, உரிமரம் ஏறுதல், பானை உடைத்தல், உறிப்பானை விளையாட்டு, சூதுதாயம், வாய்ப்புநிலை விளையாட்டுகள், அறிவுத் திறன் விளையாட்டுகள் ஆகியன ஆடவர் விரும்பி ஆடும் முக்கிய விளையாட்டுகள் ஆகும்.
மகளிர் விளையாட்டுகள் :
மகளிர் விளையாட்டுகள் பெரும்பாலும் அக விளையாட்டுகளாகவே (Indoor games) உள்ளன. தாயம், பல்லாங்குழி, தட்டாங்கல், மஞ்சள் நீர் தெளித்தல் முதலியன மகளிர் பங்கேற்கும் முக்கிய விளையாட்டுகளாகும்.
சிறுவர் சிறுமியர் விளையாட்டுகள் :
எலியும் பூனையும், சோளக்கதிர், சிறுவீடு, குலைகுலையாய் முந்திரிக்காய் ஆகியன சிறுவர் சிறுமியர் சேர்ந்து பங்கு கொள்ளும் முக்கிய விளையாட்டுகள் ஆகும்.
சிறுவர் விளையாட்டுகள் :
கிட்டிப்புள், குத்து விளையாட்டு, பச்சைக் குதிரை, குத்துப் பம்பரம், குண்டு விளையாட்டு, எறிபந்து, காற்றாடி, பட்டம், வண்டியுருட்டுதல், பூச்சி விளையாட்டு, மரங்கொத்தி முதலியன சிறுவரின் முக்கிய விளையாட்டுகளாகும்.
சிறுமியர் விளையாட்டுகள் :
சில்லி, சோற்றுப்பானை, கும்மி, திரிதிரி, கண்கட்டி விளையாடுதல், மலையிலே தீப்பிடிக்குது, தாயம், பல்லாங்குழி, தட்டாங்கல் முதலியன சிறுமியரின் முக்கிய விளையாட்டுகளாகும்.
குழந்தை விளையாட்டுகள் :
உச்சரிப்பு விளையாட்டு, வினா விடைச் சங்கிலி, பருப்புக் கடைதல் ஆகியன கிராமபுற குழந்தைகள் பங்கு பெறும் முக்கிய விளையாட்டுகள் ஆகும்.
இனி, இத்தனித்தனிப் பிரிவினரின் முக்கிய நாட்டுப்புற விளையாட்டுகள் பற்றி சற்று விரிவாகக் காண்போம்.
1. புனல் விளையாட்டு :
பண்டைத் தமிழகத்தில் ஆற்றருகே இருந்த மக்கள் எல்லோரும் ஆண்டுதோறும் ஆற்றில் புதுவெள்ளம் வந்தவுடன் ஒருங்கே சென்று பகற்பொழுது முழுதும் அவ்வெள்ளத்தில் திளைத்தாடி இன்புற்ற விளையாட்டு விழா புனல் விளையாட்டு என்று பெயர் பெற்றது. அது நீர்விழா, நீராட்டு, நீராட்டணி முதலிய பெயர் கொண்டும் வழங்கிற்று.
கரையவர் மருவி திரையகம் பிதிர திடுமென நெடுநீர் குட்டத்தில் குதித்து நீந்தி மண்ணெடுத்து கல்லா இளைஞர் மகிழ்ந்தனர் (புறநானுறு 243/8-11). பெண்டிர் அருவிகளிலும் பாய்சுனைகளிலும் ஆடவர் கடும்புனலிலும் குடைந்து குடைந்து ஆடினர்; குறுநுரை சுமந்து பலமலர் உந்தி வருகின்ற புதுநீரில் நெஞ்சு மகிழ ஆடினர் என்று சங்கப்பாடல்கள் விளக்குகின்றன.
நீராடுவோரெல்லாம் புதுவெள்ளம் வரும் ஆற்றில் இடுவதற்குப் பொன்னாலும் வெள்ளியாலும் செய்த மீன் முதலிய காணிக்கை களையும், தெப்பம் பரிசல் போன்றமிதவைக்கருவிகளையும், காதலர் மீது வாச நெய்யையும் வண்ண நீரையும் தெளிப்பதற்கு துருத்தி கொம்பு சிவிறி முதலிய விளையாட்டுக் கருவிகளையும், நீராடியப் பிறகு தேவைப்படும் உணவு, உடை முதலியவற்றையும் அவரவருக்கு இயன்றவாறு யானை குதிரை தேர் ஆகியவற்றில் ஊர்ந்தும், கால்நடையாக நடந்தும் கொண்டு செல்வர். வழியெங்கும் தங்குவதற்கான குடில்களும் புதுக்கடைகளும் அமைந்து திருவிழா கோலம் பூண்டிருக்கும்.
நீந்த வல்லவர்கள் சற்று ஆழத்திலும், அல்லாதார் கரையருகிலும் நீராடுவதும், உடம்பில் பூசும் சுண்ணம் சாந்து குழம்பு முதலியன வற்றின் ஏற்றத்தாழ்வு பற்றிப் பெண்டிர் கிண்டல் பேசுவதும், தம் கணவன்மார் பிற பெண்டிரோடு கூடிப் நீராடினாரென்று மனைவியர் ஊடல் கொள்வதும் புனல் விளையாட்டு நிகழ்ச்சிகளாகும்.
2. பொழில் விளையாட்டு :
நகரமாந்தரெல்லாம் இளவேனில் காலத்தில் ஊருக்குச் சற்றுத் தொலைவில் உள்ள ஒரு சோலைக்குச் சென்று தனித் தனியாகவும் கூட்டங்கூட்டமாகவும் ஒரு பகல் பொழுது முழுதும் விளையாடி சமைத்துண்டு மகிழ்ந்த விழா பொழில் விளையாட்டு எனப்பட்டது. இது இக்காலத்தில் உறவினரும் நண்பருமாக ஒரு சிலர் கட்டுச் சோறுடன் பிக்னிக் செல்வது போன்றதாகும்.
சோலையை அடைந்த பின் சமையலில் ஈடுபடுவோர் தவிர ஏனையோரெல்லாம் வெவ்வேறு இடம் சென்று விடுவர். ஆடவருள் பெரியவர்கள் வேட்டையாடவும், சிறியவர்கள் மரமேறுதல் காய்கனி பறித்துண்ணல் விளையாடுதல் பொருட்டும் பிரிந்து விடுவர். பெண்டிர் சமையல் செய்ய, சிறார்கள் மலர் கொய்து மாலை தொடுக்கவும், பொம்மை செய்து மகிழவும், ஊஞ்சலமைத்து உந்தியாடவும் ஆங்காங்கு அகன்று விடுவர். நண்பகல் அனைவரும் கூடி அமர்ந்து உணவு உண்ட பின், இளைப்பாறி விட்டு மாலையில் வீடு திரும்புவர்.
தொடர்ந்து விளையாடுவோம்...
|