தமிழ் ஸ்டுடியோ.காம் நடத்திய ஐந்தாவது குறும்பட வட்டம் மற்றும் சிறந்த பதிவர் விருது வழங்கும் விழா
 |
கடந்த வெள்ளிக்கிழமை (20-02-2009) அன்று சென்னை எக்மோரிலுள்ள ஜீவன ஜோதி அரங்கில் தமிழ் ஸ்டுடியோ.காம் நடத்திய ஐந்தாவது குறும்பட வட்டம் இனிதே நடைபெற்றது. தவிர்க்க முடியாத காரணத்தால் குறும்பட வட்டம் சனிக்கிழமையிலிருந்து வெள்ளிக் கிழமைக்கு மாற்றப்பட்டது.
எனினும் எதிர்பார்த்ததைவிட அதிகமான ஆர்வலர்கள் கலந்துக் கொண்டனர். இம்முறை மக்கள் தொலைக்காட்சியின் "ஜன்னலுக்கு வெளியே" நிகழ்ச்சிக் குழுவினர் வந்துப் படம் பிடித்து சென்றனர்.
|
இந்நிகழ்ச்சியை மக்கள் தொலைக்காட்ச்சியில் பார்க்க விரும்பும் ஆர்வலர்கள் எங்களை தொடர்பு கொண்டு ஒளிபரப்படும் நாள், நேரம் போன்றவற்றை தெரிந்துக் கொள்ளலாம்.
மேலும் இம்முறையும் சோதனை ஓட்ட வடிவிலேயே குறும்பட வட்டம் நடைபெற்றது. தொடர்ந்து பன்னிரண்டு மாதங்கள் குறும்பட வட்டம் சோதனை ஓட்ட வடிவிலேயே நடைபெறும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
வெள்ளிக்கிழமை என்பதனால் இம்முறை குறும்பட வட்டம் சற்று தாமதமாக தொடங்கியது. ஆனால் அனைத்து பகுதிகளும் இனிதே நடைபெற்றது. ஆனால் முதல் பிரிவில் குறும்பட வழிகாட்டல் நிகழ்ச்சியும், இரண்டாவது பிரிவில் இலக்கியப் பகுதியும், மூன்றாம் பிரிவில் குறும்பட திரையிடலும் நடைபெற்றது.
முதல் பிரிவு:
குறும்பட வழிகாட்டலான இப்பிரிவில் புகழ் பெற்ற திரைப்பட படத்தொகுப்பாளர் திரு. பழனிவேல் அவர்கள் பங்குபெற்று ஆர்வலர்களுக்கு படத்தொகுப்பு சார்ந்த உத்திகளை பயிற்றுவித்தார். தான் பங்குபெற்ற திரைப்படங்களின் படத்தொகுப்பு சார்ந்தும், அதில் பயன்படுத்தப்பட்ட உத்திகள் சார்ந்தும் தனது உரையை தொடங்கியவர், பாரதிராஜா போன்ற இயக்குனர்களிடம் பணிபுரியும்போது படத்தொகுப்பு என்பது எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதையும் விளக்கினார்.
 |
பொதுவாக குறும்படம் எடுக்கும்போது எப்படி பட்ட ஷாட்கள் வேண்டுமென்று முன்னரே தீர்மானித்துக் கொள்ள வேண்டும் என்றும், அனிமேஷன், சிறப்பு சப்தங்கள் போன்றவற்றை முன்கூடியே தீர்மானிக்க வேண்டும் என்றும் ஆர்வலர்களுக்கு எடுத்து கூறினார். மேலும், குறும்பட படத்தொகுப்பு, திரைப்படப் படத்தொகுப்பு போன்றவற்றை ஒப்பிட்டு, குறும்பட படத்தொகுப்புக்கான பல ஆலோசனைகளையும் வழங்கினார். |
அடுத்தாக கலந்துரையாடல் பகுதியில் ஆர்வலர்களின் வினாக்களுக்கு விடையளித்து பேசிய பழனிவேல் அவர்கள் படத்தொகுப்பு குறித்த அனைத்து ஐயங்களுக்கும் தன்னை தொடர்பு கொள்ளலாம் என்றும் சொல்லி சென்றார்.
 |
ஆர்வலர் ஒருவர் "திரைத்துறையில் அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களும் இயக்குனர்களாகும்போது ஏன் இதுவரை எந்த ஒரு படத்தொகுப்பாளரும் இயக்குனர் ஆகவில்லை என்று வினாவை எழுப்பினார். (இலெனின் தவிர)
அதற்கு பதிலளித்த பழனிவேல் அவர்கள் இயக்க வேண்டாம் என்கிற எண்ணம் காரணமா அல்ல என்றும், படத்தொகுப்பாளருக்கு கிடைக்கும் இயக்குனர் மிக சிறந்தவராக அமைத்துவிட்டால் அது போன்ற எண்ணங்கள் ஏற்படுவது இல்லை என்றும் பதிலளித்தார். |
முதல் பகுதி நிறைவு பெற்றதும், ஆர்வலர்கள் அனைவருக்கும் தேநீர் மற்றும் சிற்றுணவுகள் வழங்கப்பட்டன. இந்த முறை புதிதாக படத்தொகுப்பு மற்றும் டப்பிங் ஸ்டுடியோ தொடங்கியிருக்கும் நண்பர்கள் பக்தீஸ்வரன் மற்றும் குழுவினர் தேநீர் வழங்குவதற்கான முழுத் தொகையையும் செலுத்தினர்.
இரண்டாம் பகுதி.
 |
இலக்கியப் பிரிவுப் பகுதியில் இந்த முறை கீரனூர். திரு. ஜாகிர் ராஜா அவர்கள் வழிகாட்டியாக வந்திருந்தார். இரண்டு சிறுகதை தொகுதிகள், மூன்று நாவல்கள் எழுதியுள்ள இவர், தொடர்ந்து இரண்டு முறை, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம் வழங்கிய சிறந்த நாவலாசிரியர் விருதை பெற்றுள்ளார். தொடர்ந்து சிறுகதைகளைக் கூறி அதனை எப்படி படமாக்குவது என்பதை தனது பார்வையில் சொல்லி சென்றார். |
மேலும், அரசியல் பற்றியும், நான் கடவுள் படம் பற்றியும் விவாதங்கள் நடைபெற்றன.
 |
மேலும் இந்தப் பகுதியில் இந்த மாதம் முதல் சிறந்த வலைப்பதிவர் விருது வழங்கும் விழாவும் நடைபெற்றது. முதல் மாதம் வினவு என்கிற வலைப்பூ நடத்தும் நண்பர்கள் குழுவுக்கு இவ்விருது வழங்கப்பட்டது. இவ்விருதை கீரனூர். திரு. ஜாகிர் ராஜ அவர்கள் வழங்கினார். பின்னர் வினவு வலைப்பூ குறித்து தோழர் பாண்டியன் அவர்கள் பதினைந்து நிமிடங்கள் உரையாற்றினார். |
சிறந்த வலைப்பதிவர் விருது வழங்கும் விழா இதுதான் முதல் மாதம் என்பதனால் ஒரு சில குறைகள் ஏற்பட்டிருக்கக் கூடும். எனவே அடுத்த மாதம் முதல் இப்பகுதியும் சிறப்பாக நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
மூன்றாம் பகுதி
 |
இம்முறை குறும்படங்கள் திரையிடல் பகுதி மூன்றாம் பகுதியாக நடைபெற்றது. முதல் படமாக புதுச்சேரி திரு. ஆதிமூலம் அவர்கள் இயக்கிய "தேடல்" குறும்படம் திரையிடப்பட்டது. இந்த மாதம் முதல் திரையிடப்படும் படங்களுக்கு விருதுகள் வழங்கி சிறப்பிக்கப்பட்டது. படத்தொகுப்பாளர் திரு. பழனிவேல் அவர்கள் இவ்விருதுகளை வழங்கி சிறப்பித்தார். |
பின்னர் தேடல் குறும்படம் குறித்து திரு. ஆதிமூலம் தனது அனுபவங்களைப் பகிர்ந்துக் கொண்டார். பின்னர் ஆர்வலர்கள் வினா எழுப்ப இயக்குனர் ஆதிமூலம் விடையளித்து விடை பெற்றார்.
 |
இரண்டாம் படமாக புதுச்சேரி திரு. கரிகாலன் அவர்கள் இயக்கிய "எங்கே செல்லும் இந்த பாதை" எனும் குறும்படம் திரையிடப்பட்டது. இப்படத்திற்கும் விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டது. பின்னர் இயக்குனர் கரிகாலன் அவர்கள் தனது அனுபவங்களைப் பகிர்ந்துக் கொண்டார். தான் இந்த நிலைக்கு வர தனது நண்பர் திரு. ஆதிமூலம்தான் காரணம் என்று சொல்லி தங்களது நட்பின் ஆழத்தை சபையரிய செய்தார். |
பின்னர் ஆர்வலர்கள் வினா எழுப்ப விடை அளித்து விடை பெற்றார் திரு. கரிகாலன்.
 |
மூன்றாவது படமாக சென்னையை சேர்ந்த திரு. மணி அவர்கள் இயக்கிய "சீயர்ஸ்" குறும்படம் திரையிடப்பட்டது. இப்படத்திற்கும் விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டது. பின்னர் இயக்குனர் திரு. மணி அவர்கள் தனது அனுபவங்களை பகிர்ந்துக் கொண்டார். அடுத்தாக ஆர்வலர்கள் வினா எழுப்ப திரு. மணி அவர்கள் விடை அளித்தார். |
பின்னர் தமிழ் ஸ்டுடியோ காம் தளம் குறித்த தங்கள் கருத்துகளை ஆர்வலர்கள் பகிர்ந்து கொண்டனர்.
அடுத்த மாதம் முதல் குறும்பட வட்டம் நாள் முழுவதும் நடைபெறும். முதல் பாதியில் உலகப் படங்கள் திரையிடலும், அடுத்தப் பாதியில் குறும்பட வட்டமும் நடைபெறும்.
மேலும் ஒளிப்படங்களைக் (Photos) காண கீழே உள்ள இணைப்பை சொடுக்கவும்.
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
தமிழ் ஸ்டுடியோ நடத்தும் ஐந்தாவது குறும்பட வட்டம் மற்றும் சிறந்த பதிவர் விருது வழங்கும் விழா
நாள்: வெள்ளிக்கிழமை (20-02-2009)
இடம் : சென்னை ஜீவன ஜோதி அரங்கில் இக்சா மையம். இவ்வரங்கம் சென்னை கன்னிமாரா நூலகம் எதிரில் அமைந்துள்ளது.
நேரம்: மாலை மூன்று மணி (3 மணியளவில்)
முதல் பகுதி:
கவிஞர் திரு. கீரனூர் ஜாகிர் ராஜா அவர்கள் இம்மாதம் இலக்கியப் பிரிவில் மிகச்சிறந்த சமூதாய தாக்கத்துடன் வெளிவந்த ஒரு சிறுகதை அல்லது நாவலின் ஒரு பகுதி பற்றி நம்மிடையே விரிவாக பேசியும், மேலும் அந்த சிறுகதையை எப்படி படமக்கலம் என்று தன்னுடைய விரிவான ஆலோசனையும் வழங்க உள்ளார்.
இரண்டாம் பகுதி:
திரைப்படத் துறையில் படத்தொகுப்பாளாரக பணியாற்றும் திரு. பழனி வேல் அவர்கள் இந்த மாதம் குறும்பட வழிகாட்டல் பகுதியில் படத்தொகுப்பு குறித்து ஆர்வலர்களுக்கு வழிகாட்ட இசைந்துள்ளார். இவர் இயக்குனர் பாரதிராஜாவின் பெரும்பாலான படங்களுக்கு படத்தொகுப்பு செய்துள்ளார். கிழக்கு சீமையிலே, பொம்மலாட்டம், சீமானின் வாழ்த்துகள், விரைவில் வெளியாகவிருக்கும் நேசி போன்ற படைகளுக்கு படத்தொகுப்பு செய்துள்ளார்.
மூன்றாம் பகுதி:
புதுச்சேரியை சேர்ந்த ஆதிமூலம் இயக்கிய "தேடல்" மற்றும் கரிகாலன் இயக்கிய "எங்கே செல்லும் இந்த பாதை" சென்னையை சேர்ந்த திரு. மணிகண்டன் இயக்கிய "சீயர்ஸ்" ஆகிய மூன்று குறும்படங்கள் திரையிடப்பட்டு அதுபற்றிய கலந்துரையாடல் நடைபெறும். இந்த மாதம் முதல் ஒவ்வொரும் மாதமும் சிறந்த பதிவருக்கான விருது வழங்கும் விழாவும் நடைபெற உள்ளது. முதல முறையாக இந்த மாதம் வினவு (http://vinavu.wordpress.com/) என்கிற வலைப்பூ நடத்தும் குழுவினருக்கு சிறந்த வலைப்பதிவர் விருது வழங்கப்படுகிறது
மறக்காமல் வாசகர்கள் தங்கள் சந்தாத் தொகையினை கட்டுமாறு கேட்டுக் கொள்கிறோம். சந்தாத்தொகை ரூபாய் 50 மட்டும்.
மேலும் விபரங்கள் மற்றும் உறுப்பினர் படிவம் பெற:
9840698236, 9894422268
|