|
படைப்பாளிகள் - கௌரி சங்கர்
பொதுவாக எல்லோரும் ஒரே ட்ரெண்டில் தங்கள் படைப்புகளை வெளிக்காட்டும்போது அந்த ட்ரெண்டில் இருந்து மாறுபட்டு, அல்லது வேறொரு ட்ரெண்ட் செட்டராக மாறும் திறமை ஒரு சிலருக்கு மட்டுமே உண்டு.
அந்த வகையில் "லீ சாக்" எனும் தனது முதல் குறும்படம் மூலமாக அனேக விமர்சகர்கள் மத்தியில் பெரியதொரு வரவேற்பை பெற்ற திரு. கௌரி சங்கர் அவர்கள் தனது முதல் படத்தில் மாற்று கோணங்கள் இன்றி ஒரே கோணத்தில் தனது பதினைந்து நிமிட படத்தையும் முடித்துவிட்டார்.
இரயில் நிலையத்தில் அமர்ந்திருக்கும் ஒருவரிடம் திருட முற்படுவான் முகபாவம், செயல்கள் என அனைத்தும் மிகவும் யதார்த்தமாகவும், நேர்த்தியாகவும் படம் பிடிக்கப்பட்டுள்ளது. இறுதியில் அமர்ந்திருப்பவர் இறந்து போனவர் என்று தெரியும் வரும்போது திருடன் பயந்து ஓடும்போது உண்மை சம்பவத்தை பார்த்த அனுபவத்தை நமக்கு கொடுக்கிறது.
ஒரே கோணத்தில் ஒரு குறும்படத்தை எடுத்து முடித்திருப்பது குறும்பட உலகிற்கு இது புதிது. மேலும் பின்னணியில் மழை பெய்யும் சப்தம், யாருமற்ற சூழ்நிலை என படம் முழுவதும் உண்மை நிகழ்வுகள் அழகாக படம் பிடிக்கப்பட்டுள்ளது.
இனி குறும்பட இயக்குனர் திரு. கௌரி சங்கர் அவர்களிடம் ஒரு நேர்காணல்:
1. குறும்படங்கள் மீது உங்களுக்கு ஏற்பட்ட ஆர்வத்தின் பின்னணி குறித்து?
என் கல்லூரி நாட்களில், அதிகமாக உலக திரைப்படங்களை காணும் வாய்ப்பு கிடைத்தது.அதன் தாக்கம் உலகத்திரைப்படத்தைபோல ஒரு சிறு துளியாவது நானும் செய்ய வேண்டும் என்று தூண்டியது.
2. உங்கள் முதல் குறும்படம் பற்றி?
ஒரு முறை நான் திருமயிலை ரயில் நிலையத்தில் இருக்கும்பொழுது அங்கு ஒரு புகைப்படம் எடுத்தேன்.அந்தப்புகைப்படத்தை பார்க்கும் பொழுதெல்லாம் அதே கோணத்தை மையமாக வைத்து ஒரு குறும்படம் ஒரே சட்டகத்துக்குள் பரிசோதனை செய்யத்தூண்டியது.
3. அள்ளக் அள்ளக் குறையாத சொல்வளம் உள்ள தமிழை விடுத்து பிரெஞ்சு மொழியில் உங்கள் குறும்படத்திற்கு பெயர் வைக்கக் காரணம்?
திரைப்படங்களை மொழிகளின் எல்லைக்கு அப்பாற்பட்டதாகவும் ஒரு காட்சி ஊடகமாகவும் மட்டுமே நான் பார்க்கிறேன்.தமிழ் தலைப்பை தவிர்த்ததற்கு குறிப்பிட்ட நோக்கம் எதுவும் இல்லை.
4. லீ சாக் குறும்படத்தில் கேமராக் கோணங்கள் மாற்றமின்றி ஒரே கோணத்தில் படமாக்கப் பட்டதற்கு ஏதேனும் சிறப்புக் காரணங்கள் உண்டா? இப்படி ஒரு புது முயற்சி செய்யும் எண்ணம் உங்களுக்கு எப்படி ஏற்பட்டது?
இப்படத்தை ஒரே கோணத்தில், ஒரே ஷாட்டில் எடுக்க வேண்டும் என்பதே என் முதல் எண்ணம்.ஒரு நிகழ்வு எந்த நேரத்தில், எப்படி நிகழ்கிறதோ(Real time) அதை அப்படியே படத்தொகுப்பு, கேமரா கோணமாற்றம் இன்றி எடுக்க விரும்பினேன்.
5. பொதுவாக இரயில் நிலையங்களில் படம் பிடிக்க அனுமதி கிடைப்பது குதிரைக் கொம்பாக உள்ள இக்காலத்தில் நீங்கள் எப்படி உங்கள் குறும்படத்தை இரயில் நிலையத்தில் படம் பிடித்தீர்கள்?
அந்த ரயில் நிலையம் முழுமையாக கட்டிமுடிக்கபடாத நிலையில் இருந்தது.ரயில் போக்குவரத்து இல்லாத நிலையில் மக்கள் நடமாட்டமும் இல்லாமல் இருந்தது.ஆனாலும் ஒரு சில பிரச்சினைகள் இருந்தன.
6. உங்கள் குறும்படம் பரவலாக திரைப்பட விமர்சகர்கள் மற்றும் திரைப்பட நுணுக்கங்கள் தெரிந்த தொழில்நுட்ப கலைஞர்கள் ஆகியோரிடத்தில் மட்டுமே நல்லத் தாக்கத்தை உண்டு பண்ணியுள்ளது என்கிற குற்றச்சாட்டு உள்ளது. . இதைத்தான் நீங்கள் எதிர்பார்த்தீர்களா? அல்லது ஏதும் அறியாத பாமர மக்கள் இடத்திலும் உங்கள் குறும்படம் சென்று சேர்ந்துள்ளதாக நினைக்கிறீர்களா?
இந்த திரைப்படத்தை யோசித்தபோதோ, இயக்கியபோதோ இது யாரைச் சென்றடையப்போகிறது என்ற எண்ணம் எனக்கு வரவில்லை.இந்த படம் திரைப்பட ஆர்வலர்கள் மற்றும் விமர்சகர்களிடையே மட்டுமே தாக்கத்தை ஏற்ப்படுத்தியுள்ளது என்பது எனக்கு வியப்பை அளிக்கவில்லை. ஏனென்றால் விமர்சகர்கள் கண்ணோட்டமும் பாமர மக்களின் கண்ணோட்டமும் பல நேரங்களில் ஒன்றாக இருந்ததில்லை.ஒரு படைப்பு அனைவரின் ரசனைகளையும் நிறைவு செய்யவேண்டுமென்றால் அந்த படைப்பு தனித்துவத்தை இழந்துவிடும் என்பது என் கருத்து.
7. உங்கள் குறும்படத்திற்கு கிடைத்த வரவேற்பு மற்றும் விருதுகள் பற்றி?
."லீ சாக்" குறும்படம் கனடா நாட்டில் உள்ள தமிழ்ச்சங்கத்திற்கு திரையிடுவதற்காக அனுப்பப்பட்டுள்ளது.மற்றும் ரோட்டராக்ட் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது.மற்றும் இந்த படம் நவீன சினிமாவுக்கான களமான "நிழல்" பத்திரிகையின் அட்டைப்படத்தில் இடம்பெற்றதோடல்லாமல் அதில் சிறந்த விமர்சனங்களையும் பெற்றுள்ளது.
8. உங்களுடன் பணியாற்றிய சகக் கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றி?
இப்படத்தில் உழைத்த கலைஞர்களின் எண்ணிக்கை மிகக்குறைவு.என்னையும் சேர்த்து நால்வர் மட்டுமே.படத்தில் நடித்தவர்கள் என் சகோதரன் ஹரிஹரன் மற்றும் என் கல்லூரி நண்பன் விவேக். இணை இயக்குனராக அபிராம் விஸ்வநாதன் உதவியிருக்கிறார்.
9. பொதுவாக குறும்படங்கள் அனைத்து தரப்பட்ட மக்களையும் சென்று சேர அரசாங்கம் மற்றும் பிற அமைப்புகளிடம் நீங்கள் எதிபார்க்கும் உதவி?
திரையரங்குகளில் திரைப்படங்களுக்கு நடுவே விளம்பரங்களைப்போல குறும்படங்களும் திரையிடப்பட்டால் அது அனைத்துத்தரப்பினரையும் சென்றடைய உதவியாக இருக்கும்.
10. உங்கள் அடுத்தக் கட்ட முயற்சி என்ன? தொடர்ந்து குறும்படங்கள் இயக்கம் எண்ணம் உண்டா? ஏதேனும் நல்ல படைப்புகளை உருவாக்க உங்களுக்கு அரசாங்கம் அல்லது ஆர்வலர்களிடம் இருந்து உதவிகள் தேவைப்படுகிறதா? என்றால் அந்த படைப்பு குறித்தும் செலவுகள் குறித்தும் கொஞ்சம் சொல்லுங்களேன்?
எதிர்காலத்தில் இன்னும் புதுமையான படைப்புகளை உருவாகும் ஆர்வத்துடன் இருக்கிறேன்.உரிய நேரத்தில் முழுமையான விவரங்களுடன் உதவி நாடுவேன்.
படைப்பாளிகள் பயணிப்பார்கள்...
|