|
படைப்பாளிகள் - ரமேஷ்
"எனது தற்போதைய பணி என் வாழ்வாதாரம். உணர்வுபூர்வமான நமது அனுபவங்களை, சில பக்க வரிகளால் எழுத்திலும், சில மணி நேர வார்த்தைகளாலும் புரியவைப்பதை விட, ஒளிவடிவ குறும்படங்கள் பார்வையாளனுக்கு உணர்ச்சிபூர்வமான அனுபவத்தை தரும் என்பது எனது நம்பிக்கை!" என்று உரக்கக் கூறும் ரமேஷ் தற்போது தகவல் தொழில்நுட்ப துறையில் பணிபுரிந்துக் கொண்டிருப்பவர். திரைப்படத் துறையில் அவருக்கு இருக்கு தீராக் காதலை அவரது தேடுதலின் மூலமே கண்டுக் கொள்ளலாம். ஒரு துறையில் நமக்கு "PASSION" இருக்குமானால் அந்தத் துறையில் நாம் சாதிப்பது உறுதி, என்பது அவரது அசைக்க முடியாத நம்பிக்கை. அதனை செயல்படுத்தியும் கொண்டிருக்கிறார்.
எந்த வித முன் அனுபவமும் இன்றி அவர் எடுக்கும் குறும்படங்களில் இருக்கும் நேர்த்தி, தொழில்நுட்ப கூறுகள் அனைத்தும் வியப்பளிப்பவை. அவரது கனவு நிறைவேற தமிழ் ஸ்டுடியோ.காம் அவரை வாழ்த்துகிறது.
இனி இயக்குனர் திரு.ரமேஷ் அவர்களுடன் ஒரு நேர்காணல்:
1. ரமேஷ் யார்?
பிறப்புக்கான காரணத்தை உலகுக்கு பறைசாற்ற எல்லோரின் ஓட்டம். இதில் பிறர்மீது முட்டி மோதாமல், யார் மீதும் ஏறிச்செல்லாமல், ஒருவித வேட்கையோடு என் இலக்கை நோக்கியானது எனது ஓட்டம். இதில் சமூகம் என்னை எப்படி அடையாளம் காணவேண்டும் என நான் விழைவது, "ஓ அவனா?" என்றல்ல..."ஓ அவரா?"
2. தகவல் தொழில்நுட்ப துறையில் பணிபுரியும் உங்களுக்கு குறும்படங்கள் மீது ஆர்வம் ஏற்பட என்ன காரணம்?
கலைத்துறையால் நான் ஈர்க்கப்பட்டு பல வருடங்களாகிறது. எனது தற்போதைய பணி என் வாழ்வாதாரம். உணர்வுபூர்வமான நமது அனுபவங்களை, சில பக்க வரிகளால் எழுத்திலும், சில மணி நேர வார்த்தைகளாலும் புரியவைப்பதை விட, ஒளிவடிவ குறும்படங்கள் பார்வையாளனுக்கு உணர்ச்சிபூர்வமான அனுபவத்தை தரும் என்பது எனது நம்பிக்கை!
3. இதுவரை நீங்கள் எடுத்துள்ள குறும்படங்கள் பற்றி?
இரண்டு குறும்படங்கள். 'சுவடுகள்' மற்றும் 'கௌடில்யன்'
4. சுவடுகள் குறும்படம் அதன் தொழில்நுட்ப அளவில் சிறப்பாக இருந்தாலும், நடிகர்களின் மிகைப்படுத்தப்பட்ட அல்லது ஈடுகொடுக்க முடியாத நடிப்பு மிகப்பெரிய குறையாகத் தெரிகிறதே? நடிகர்கள் தேர்வு மீது கவனமின்மையா? அல்லது குறும்படங்களுக்கே உரித்தான கால அளவுப் பிரச்சனையா?
எது நமக்கு தேவை என்பது தெரியாவிட்டலும், எது நமக்கு தேவையில்லை என்பது ஒரு இயக்குனருக்கு நிச்சயம் தெரியவேண்டும். 'சுவடுகள்' குறும்படம் இதனை எனக்கு கற்றுக் கொடுத்தது. பொருளாதார கண்ணோட்டத்திலேயே நடிகர்கள் தேர்வு, முன் அனுபவமின்மையே அந்த குறும்படத்தில் தெரியும் குறைகளுக்கு காரணம். இனி எத்தனை குறுப்படங்களை இயக்கினாலும் 'சுவடுகள்' என்னுள் பதித்த சுவடுகளே அதிகமிருக்கும், அது எனக்கு கற்றுக் கொடுத்தது நிறைய!
5. குறும்படங்கள் என்பது எதோ ஒரு கருத்தை இந்த சமுதாயத்திற்க்கு சொல்வதற்காகவா? அல்லது திரைப்படத் துறையில் நுழைவதற்கான துருப்புச் சீட்டாக பயன்படுத்துவதற்கா?
'கதைசொல்லி' என்று சொல்வார்கள் கேள்விப் பட்டிருக்கிறீர்களா? எனது பார்வையில் ஒரு இயக்குனர் "ஓளிவடிவ கதைசொல்லி' அவருக்குள் இருக்கும் கதையை பார்வையாளர்களுக்கு சொல்லவேண்டும் அவ்வளவே! குறும்படத்துறையில் எளிதில் பார்வையாளர்களிடம் ஒரு படைப்பை சேர்ப்பதற்கான சரியான வடிவம் இன்னும் ஏற்படவில்லை. திரைத்துறை என்பது வேறொரு தளத்தில் கோடிக்கணக்கான பார்வையாளர்களைக் கொண்டது, உங்களது நல்ல கதைகளை ஆர்வத்துடன் பார்க்க நிறையபேர் இருக்கிறார்கள்.
குறும்படம், திரைப்படம் இரண்டையும் நான் படமாகவே பார்க்கிறேன். ஒரு படம் சரியான கதையம்சம் அல்லது காட்சி நிகழ்வுகளை கொண்டதாக அமைந்தாலே போதுமானது. சமுதாயத்திற்கான ஒரு கருத்தை சொல்ல வேண்டும் என்பது அவசியமில்லாதது என்பது என் கருத்து.
துருப்புச் சீட்டு? ஒரு படைப்பாளி ஒரு தளத்தில் தன்னை தயார் செய்து கொண்டு வேறொரு தளத்தில் தன்னை நிரூபிக்க முனையும் முன்பாக எண்ணுங்களேன்?
6. உங்களின் முதல் குறும்படம் எந்த ஒரு கருத்தையும் விட்டு சென்றதாக தெரியவில்லை. ஆனால் இரண்டாம் குறும்படம் "கௌடில்யனில்" இந்த சமூகத்தின் மீது உங்களுக்கிருக்கும் மிகப் பெரிய அக்கறை தெரிகிறதே?
தங்களது பாராட்டிற்கு நன்றி! குறுப்படங்களில் சமூகக் கருத்துக்கள் சொல்வது அவசியமில்லை என நான் சொன்னாலும், எனது இந்த இரண்டு குறும்படங்களும் சமூகப் பார்வைகளை கொண்டதாகவே அமைந்திருக்கின்றன.
எனது முதல் குறும்படம் எந்த ஒரு கருத்தையும் விட்டு சென்றதாக தெரியவில்லை என நீங்கள் சொல்வதை நான் ஆட்சேபிக்கிறேன். அதே நேரத்தில் வருந்துகிறேன். "தனி மனிதக் குற்றம் ஒருவரை மட்டுமே பாதிப்பவை அல்ல அதன் சுவடுகள் வழிவழியாய்..." என்பதே சுவடுகள் குறும்படத்தின் சாரம். இதை பார்வையாளர்களுக்கு சரியான முறையில் கொண்டு சேர்க்காமல் போனதற்கு வருந்துகிறேன்.
7. கௌடில்யன் கரு உருவான விதம் பற்றி?
சாலையோரத்தில் விழுந்துகிடக்கும் பெரியவரின் மயக்கம், போதையாலா? பசி மயக்கமா? என தெரிந்து கொள்ளக் கூட நேரமில்லாத இன்றைய வேகமான வாழ்க்கை ஓட்டம் என்னை சிந்திக்க வைத்தது. எதை நோக்கி இந்த ஓட்டம்? இதன் பலா பலன்கள்? இந்தப் போக்கை சாத்வீகமான முறையில் எப்படி மாற்றலாம்? என்ற சிந்தனையில் உருவானது. சந்தோஷ் கதாபாத்திரத்தின் தவறான வாழ்வியல் முறை நம்மில் பலரையும் பிரதிபலிப்பதே! நான் உட்பட!
8. கௌடில்யன் குறும்படத்தில் ஆங்காங்கே சமஸ்கிருத ஸ்லோகங்களை பயன்படுத்தி இருப்பீர்கள். சமஸ்கிருத ஸ்லோகங்களை பயன்படுத்த என்ன காரணம்? இது போன்ற புரியாத வார்த்தைகளை சொன்னால் பாமரன் நம்மையெல்லாம் மிகப்பெரிய புத்திசாலிகள் என்று நினைப்பார்கள் என்பதற்காகவா? சமஸ்கிருதத்தில் இருக்கும் அதே வார்த்தைகள்...அதை விட வலிமையான வார்த்தைகள் தமிழில் உள்ளனவே?
பல கேள்விகளை ஒன்றடக்கிய ஒரு கேள்வி என்பதால் சற்றே பெரிய பதில். மன்னிக்கவும்!
கௌடில்யன் குறும்படத்தில் சமஸ்கிருத ஸ்லோகங்களை ஒரே ஒரு இடத்தில் ஒரே ஒரு வாக்கியத்தை மட்டுமே பயன்படுத்தி இருக்கிறேன்.
சமஸ்கிருத ஸ்லோகங்களின் ஒலிகள் அசாதாரணமானவை. முற்காலத்தில் கோவில்களில் மனிதனையும் கடவுளையும் (விக்ரஹங்கள்) இணைக்கும் பாலமாக, அந்த கர்ப்பக்கிரஹத்தை சக்தி பிழம்பாக மாற்றும் ஊடகமாக சமஸ்கிருத உச்சாடனங்களை பயன்படுத்தினார்கள். இந்த குறும்பட கதையோட்டத்தில் அந்த ஒரு தருணத்தில் நான் பார்வையாளனின் மொத்த கவனத்தையும் ஈர்க்க வேண்டும் (Seeking Attention என சொல்வார்கள்.) அதே நேரத்தில், உச்சரிக்கும் அமானுஷ்ய ஒலிகளும் அதன் சாரமும் பார்வையாளனின் ஆழ்மனதை சேர்ந்தால் மட்டுமே நாம் எடுத்துக்கொண்ட விஷயத்தின் தீவீரம் பார்வையாளனுக்கு புரியும் என்று நம்பினேன். அதில் ஓரளவுக்கு வெற்றி பெற்றதாகவே எண்ணுகிறேன்.
பாமரனுக்கு புரியாத வார்த்தைகளை உபயோகித்தால் நம்மை புத்திசாலிகள் என நினைப்பான் என யார் சொன்னது? அவனுக்கு புரியவில்லை என்றால் புரியவில்லை என்று தான் சொல்லுவான். நம்மை புத்திசாலிகள் என ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டான் என்பது எனது அனுபவ அறிவு! தவிர கனமாக கதையம்சமும் எதிர்பாராத திருப்பமும் கொண்ட இந்த குறுப்படத்தில் புத்திசாலித்தனத்தை நான் அதிகம் கவனத்தில் எடுத்துக்கொள்ளவில்லை.
தமிழ் மொழியில் வலிமையான, மிக வலிமையான வார்த்தைகள் இருக்கின்றன என்பதை நான் மறுக்கவில்லை. இந்த மொழியில் மட்டும் தான் கதை சொல்லவேண்டும் என எனக்குள் எந்த வரையறையுமில்லை! ஒரு படைப்புக்கு தேவை என்றால் எதையும் எங்கிருந்து வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம், அது அந்த படைப்பை நிச்சயம் மேம்படுத்தும் என்றபட்சத்தில்...
நான் ஒரு தமிழ்ப்பற்றாளன். தங்களது இந்த கேள்வி தாங்கள் தமிழ்ப்பற்று என்ற கட்டத்தை தாண்டி வேறொரு கட்டத்திற்கு சென்றுவிட்டதாக கருதுகிறேன்.
9. பொதுவாக திரைப்படத் துறையில் இருக்கும் பெரும்பாலானவர்கள் புத்தகங்கள் படிப்பதில்லை. ஆனால் புத்தகங்கள் படிப்பது ஒரு படைப்பாளியின் படைப்புத் திறனை உயர்த்தும் என்பது உறுதி. நீங்கள் எப்படி?
உண்மை. புத்தகங்களை படிப்பதால் ஒரு படைப்பாளியில் பல்வேறு (சிந்தனை)கதவுகள் திறக்கபடுகின்றது. பார்ப்பதை விட படிக்கும்போது நமக்குள் நிறைய 'ஏன்?' களும் 'எப்படி?' களும் உருவாகி நமக்கு தெரியாமலேயே நமக்குள்ளான விஸ்தரிப்புக்கு வழிவகுக்கின்றன. நான் சிறுவயது முதலே புத்தகங்கள்பால் ஈர்க்கப்பட்டேன், இப்போது படிக்கும் புத்தகங்களின் எண்ணிக்கை அதிகமாகியிருக்கிறது.
10. குறுப்படத்துறை மேலும் வளர என்ன செய்யலாம்? உங்களுக்கு அது சார்ந்த உதவிகள் ஏதேனும் தேவைப்படுகிறதா? அல்லது இந்தத் துறைக்கு புதிதாக வருபவர்களுக்கு நீங்கள் ஏதேனும் உதவிகள் செய்ய இயலுமா?
ஒரு குறும்படம் எடுத்து முடித்தவுடன், அதை என்ன செய்யலாம்? எப்படி பார்வையாளர்களிடம் கொண்டு சேர்க்கலாம் என இன்னும் பல தயாரிபாளர்களுக்கும், இயக்குனர்களுக்கும் சரியாக விளங்கவில்லை. அது சரியாக புரியும் போது பல சிறந்த படைப்புக்கள் வெளிவரும் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது!
ஒவ்வொரு மாதத்திலும் எங்கு குறும்பட போட்டிகள் நடக்கின்றன? இந்தியாவில் எத்தனை விழாக்களில் உரிய முக்கியதுவம் அளிக்கபடுகின்றன? உலக அரங்கில் ஒரு குறும்படம் போட்டியிட எத்தனை விதிமுறைகள் இருக்கின்றன? எவை எல்லாம் பிரசித்தி பெற்ற குறும்பட விழாக்கள்? பொருளாதார அளவில் பரிசுகள் எப்படி குறும்பட தயாரிப்பு செலவை திரும்பப் பெற/குறைக்க உதவும்? இப்படி பல கேள்விகளுக்கு சரியான பதில்கள் எனக்கு கிடைத்தால், இன்னும் தெளிவாக பணிபுரிய ஏதுவாக இருக்கும். இவை அத்தனையும் இணையத்தில் யார் வேண்டுமானாலும் தெரிந்து கொள்ளலாம் என்ற பதிலிருந்தாலும், இது சரியான வழிமுறை என அனுபவசாலிகளின் துறைசார்ந்த அனுபவத்தை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
புதியவர்களுக்கு, நான் இரு குறும்படங்களே எடுத்திருப்பினும் எனது துறை சார்ந்த அனுபவ பகிர்வுக்கு எப்போதுமே தயாராக இருக்கிறேன்.
இதுவரை எனது பதில்களை பொறுமையுடன் படித்த அத்தனை நண்பர்களும், இந்த வாய்ப்பளித்த தமிழ் ஸ்டுடியோ.காம்- க்கும் நன்றி!
படைப்பாளிகள் பயணிப்பார்கள்...
|
குறும்பட வட்டத்தில் உங்களின் சுவடுகள் குறும்படத்தை பார்த்தேன். விஜய் மில்டன் அவர்கள் மிக சிறப்பாக அந்தக் குறும்படம் பற்றி திறனாய்வு செய்தார்கள். உங்களின் கௌல்டியன் குறும்படத்தைக் காண ஆவலாய் இருக்கிறேன். வாழ்த்துகள்.
அனுப்பியவர் Sundaram on Sunday, 2.05.10 @ 10:30am
koudilyan kurumbadap peyare nanraaga irukkiradhu. andhak kurumbadam engek kaanak kidaikkum. thamizh studiyovil illaiye?
அனுப்பியவர் sudhakar on Sunday, 2.05.10 @ 21:58pm
nalla nerkaanal.
அனுப்பியவர் Myth on Sunday, 9.05.10 @ 21:35pm
திரு.சுந்தரம், திரு. சுதாகர், திரு மைத் ஆகியோரின் கருத்து பதிவுக்கு நன்றி! விரைவில் 'கௌடில்யன்' குறும்படத்தை பார்ப்பதற்க்கு Thamizhstudio.com மூலம் ஏற்ப்பாடு செய்கிறேன். ப. ரமேஷ்
அனுப்பியவர் ப. ரமேஷ் on Wednesday, 12.05.10 @ 22:25pm
சுவடுகள் படம் யு துபில் பார்க்கக் கிடைத்தது. நல்ல முயற்சி. ஆனால் கௌடில்யன் படத்திற்காக தமிழ் ஸ்டுடியோவில் நம்பிக்கை நட்ச்ச்சத்திரமாக வந்துள்ளீர்கள். வாழ்த்துகள். அந்தப் படம் எங்கே விற்பனைக்கு கிடைக்கும்.?
அனுப்பியவர் மாசிலாமனி on Saturday, 19.06.10 @ 10:27am
suvadugal you tubil parkka kidaithadhu. nan parthadhil one of the worst film.. i dont know about koudilyan. nambikkai natchaithiram kodukka vendiya alavukku enna sadhitheero theriyavillai. nichayam parthu vida vendum.
அனுப்பியவர் ஆல்பெர்ட் on Monday, 28.06.10 @ 23:37pm
திரு ஆல்பெர்ட் அவர்களுக்கு, எனது கௌடில்யன் குறும்படமும் உங்களது எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வது கேள்விக்குறியே...எனது புதிய படைப்புக்களில் முயற்ச்சிக்கிறேன். பதிவிற்க்கு நன்றி! ப.ரமேஷ்
அனுப்பியவர் Ramesh on Wednesday, 30.06.10 @ 13:09pm
tamil studio vattathil koudilyan paarthen. miga nalla muyarchi. rasithup parthen. anru ungalukkuthan ottup poda vendum enru ninaithen. aanal anaivarukum viruthu koduthu vittargal. valthugal. mr. albert you should see koudilyan.. its the one of the nice concept. padaipaligalai kayappaduthaatheergal. neengal mattum enna edutthuk kizhitthuvitteer.. vimarasippadhu elloraalum mudiyum. padam eduthup parungal theriyum avasthaigal.
அனுப்பியவர் Sudhakar on Friday, 2.07.10 @ 04:49am