ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் – ௦02 - அக்னிப்பார்வை
’வாவ்’
I think cinema, movies, and magic have always been closely associated. The very earliest people who made film were magicians.
--Francis Ford Coppola
ஸ்டிவன் ஆலன் ஸ்பீல்பெர்க் 1946 ஆம் ஆண்டு டிசம்பர் 18ம் தேதி அமெரிக்காவின் ஒஹாயோ மாநிலத்தில் சின்சினாடியில் ஒரு யூதக் குடும்பத்தில் பிறந்தார். ஸ்பீல்பெர்கின் முன்னோர்கள் அமெரிக்காவை சேர்ந்தவர்கள் அல்ல. உண்மையாக சொன்னால் ருஷ்யாவை சேர்ந்தவர்கள்.
ஸ்பீல்பெர்கின் தந்தை வழியை சேர்ந்தவர்கள் ருஷ்யாவில் நடந்த யூதக் கொடுமைகளை தொடர்ந்து அமெரிக்காவிற்கு குடிப் பெயர்ந்தார்கள். தாய் வழியை சேர்ந்தவர்கள் போலந்திலிருந்து அமெரிக்காவிற்கு பிழைக்க வந்தவர்கள். தாய் வழி உறவினர்கள் பலர் பின்பு இராண்டாம் உலகப் போரில் சித்திரவதைக்குள்ளானவர்கள்.
ஸ்பீல்பெர்கின் தந்தை அர்னால்ட் ஸ்பீல்பேர்க் அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்தவர் என்பதால் ஆரம்பத்தில் மிக ஏழ்மை காரணமாக சரியாக படிக்க முடியவில்லை. அதுமட்டுமல்லாமல், அவர் நிலமை போரில் பங்கெடுக்க வேண்டியாதாகிவிட்டது.
 |
அர்னால்ட் ஸ்பீல்பெர்க் இராண்டாம் உலகப் போரில் அமெரிக்க ரேடியோ பிரிவில் வேலைக்கு அமர்த்தபட்டார். அதனால் அவர் உலகம் முழுவதும் இருந்த போர் களங்களுக்கு நேரிடையாக சென்று அங்கிருக்கும் ரேடியோ கருவிகளை பழுதுப் பார்ப்பதும் புதுக் கருவிகளை பொருத்தும் பணியில் அமர்த்தப்ட்டார். இரண்டாம் உலகப் போர் முடிவடைந்ததும், போரில் பங்கேற்ற இளைஞர்களுக்கு சிறப்பு சலுகையாக மேற்படிப்பு படிக்க அமெரிக்க அரசு உதவி தொகையை கொடுத்தது. அதை கொண்டு அர்னால்ட் எலக்டிரிகல் எஞ்சினியரிங்க் பட்டம் பெற்றார். பின்பு அவர் ஒரு நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்த போது அவருக்கு கிடைத்த வேலை, கணிப்பொறிகளை இயக்குவது. |
ஸ்பீல்பெர்கின் தாயார் லே ஆல்டர் ஸ்பீல்பேர்க். இவர் போலந்து நாட்டை சேர்ந்தவர் என்றாலும் பிழைக்க அமெரிக்காவிற்கு வந்துவிட்டவர். மிகுந்த அறிவாளி தேர்ந்த இசை கலைஞர்.அர்னால்டிர்க்கும் லேவுக்கும் ஸ்டிவன் தவிர மூன்று பெண் குழந்தைகள் பிறந்தனர்.
ஸ்பீல்பெர்க் சிறு வயதிலிருந்தே மிகவும் சுட்டியானவர். குறிப்பாக அவருக்கு மற்றவர்களை பயமுறுத்துவது மிகவும் பிடித்திருந்தது.விதவிதமான கற்பனை கதைகள் சொல்லுவார். ஒரு முறை அவர் தங்கைக்கு கூறிய கதை இது தான், நிலாவில் இருந்து ஒரு வினோத ஜந்து பூமிக்கு அதுவும் அவர்கள் வீட்டின் வெளியே வந்து கதவை தட்டுகிறது. ஸ்பீல்பெர்க் கதைவை திறக்கிறார்.....
அதை தொடர்ந்து அவர் விடும் அந்த இடைவெளியை அவர் கவனித்திருக்கிறார்.. கதை கேட்பவர்களின் எதிர்பார்ப்பு அவருக்கு ஒரு வித மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது.
அதுமட்டுமல்ல பக்கத்து வீட்டில் இருக்கும் சிறுவர்களுடன் வம்பு செய்வதிலும் ஸ்பீல்பெர்க் அதீத கவனம் செலுத்தினார்.அவர் பக்கத்து வீட்டு சிறுமி எப்பொழுதும் தன் தந்தையிடம் தன்னைப் பற்றி புகார் செய்தபடி இருப்பதும், ஒரு கட்டத்தில் அந்த சிறுமியின் தந்தை அலுவலகம் முடிந்து வீட்டிற்கு வந்தவுடன் முதல் வேலையாக தன் மகளை அழைத்து “இன்றைக்கு அந்த பக்கத்து வீட்டு ராஸ்கல் என்ன செய்தான்” என்று கேட்பதும் வாடிக்கையாகிவிட்டது.
அர்னால்ட் ஸ்பீல்பெர்க் தன் குழந்தைகளுக்கு அவர்களின், சிறு வயதிலேயே தன் இரண்டாம் உலகப் போர் அனுபவங்களை கதைகளாக சொல்லுவது வாடிக்கை. ஸ்பீல்பெர்க் இரண்டாம் உலகப் போரின் சாகசக் கதைகளை கேட்டவாரே வளர்ந்தார். இன்னொரு பக்கம் லே, ஸ்பீல்பெர்கிற்க்கு பியானோவை அறிமுகம் செய்துவைத்தார். அர்னால்ட் இராண்டாம் உலகப் போரை அடுத்து அதிகமாக கணிப்பொறிகளை பற்றி பேசினார். ஸ்பீல்பெர்க் தன் தந்தையிடமிருந்து கதைகளையும், தன் தாயிடமிருந்து இசையையும் கற்றுக்கொண்டார்.
ஸ்பீல்பெர்கிற்கு சுத்தமாக கல்வியின் மீது நாட்டமில்லை. அதற்கு முதல் காரணம் ஸ்பீல்பெர்க் வசித்து வந்த பகுதியில் அதிகமாக யூதர்கள் வசிக்கவில்லை. பெரும்பாலானவர்கள் கத்தோலிக்க கிறிஸ்துவர்கள். அதனால் யூத சிறுவனான ஸ்பீல்பெர்கை கேலி செய்ய தொடங்கினார்கள். இதனால் ஸ்பீல்பெர்க் பள்ளியை வெறுத்தார். தான் யூதனாக இருப்பதால்தானே கேலி செய்கிறார்கள் என யூத மதத்தையும் வெறுத்தார். எப்பொழுதும் தனிமையில் இருக்கவே விரும்பினார். தனக்காக ஒரு கற்பனை உலகத்தை சிருஷ்த்துக் கொண்டார்.
ஒரு முறை அர்னால்ட், ஸ்பீல்பேர்கை சினிமாவிற்கு அழைத்துச் சென்றார். ஸ்பீல்பெர்கிற்கு சினிமா என்றால் புரியவில்லை. அந்தப் படம்தான் அப்போது ஆஸ்கர் விருதை (1952) வென்ற சிஸில் பி டிமிலியின் “The Greatest Show on the Earth”. சர்கஸை மையமாக கொண்டத் திரைப்படம். ஆனால், ஸ்பீல்பெர்கோ சர்க்ஸை எதிர்பார்த்து சென்று திரையில் ஓடிய சர்கஸை பார்த்து ஏமாற்றமடைந்தார். அவருக்கு இந்த இரண்டு பரிமான சர்கஸ் பிடிக்கவில்லை!
அர்னால்ட் ஒரு நாள் ஸ்பீல்பெர்கிற்கு ஒரு 8 மிமி கேமரா ஒன்றை வாங்கி கொடுத்தர். அப்போதைய நாட்களில் அது மிக குறைந்த விலையே. அது தான் சினிமாவிற்காக ஸ்பீல்பெர்க் செய்த முதலீடு. அர்னால்டிற்கு படம் பிடிப்பது பொழுது போக்கு. அதே பொழுதுபோக்கை தன் மகன் பெற அவர் ஒரு கேமராவை வாங்கிக் கொடுத்தார். உண்மையாக சொல்லப்போனால் அந்த நாளை குறித்து வைத்துக்கொள்ள மறந்துவிட்டார்கள். ஒரு மிகப் பெரிய ஹாலிவுட்டின் சரித்திரம் தொடங்கிய நாள் அன்றுதான்.
ஸ்பீல்பெர்க் அந்த கேமராவை கொண்டு படம் பிடிப்பதில் பெறும் மகிழ்ச்சியடைந்தார். பள்ளியைவிட படிப்பைவிட கேமராவும் அதில் படம்பிடிப்பதும் ஸ்பீல்பெர்கின் வாழ்க்கையாகியது. ஒரு நாள் அவர்கள் வீட்டில் இருந்த ஒரு ரயில் பொம்மையை வைத்து விளையாடுவதும், அது எழுப்பும் சத்தமும் அர்னால்டிற்கு எரிச்சல் தரவே, அதை பரண் மேல் போட போவதாக சொன்னார். மீறி விளையாடினால் அதை உடைத்துவிடுவேன் என்று பயமுறுத்திவிட்டு சென்றார்.
ஸ்பீல்பெர்க் அதை கொஞ்சம் சீரியசாக எடுத்து கொண்டு ஒரு முடிவு செய்தார். எப்படியும் தந்தை உடைக்கப்போகும் பொருள் தானே அதை நாமே உடைத்து அது உடையும் போது படம் பிடித்தால் என்ன என்று ஒரு ஐடியா தோன்றவே, செயலில் இறங்கினார்.
இரண்டு ரயில் பொம்மைகளை ஒரே ட்ராக்கில் ஓட வீட்டு அது மோதிக்கொள்வதை படம் பிடிக்கவேண்டும். கொஞ்சம் டிரமிட்டிக்காக பக்கத்தில் சில மனித பொம்மைகளை வைத்து ஒரு ரயில் விபத்து நிகழப்போவதும் அதை பார்த்து அதிர்ச்சியடையும் மனிதர்களையும் திரையில் எடுத்து வந்தார்.
ஒரு நிமிடம்....!
அந்த காலத்தில் ஸ்பீல்பெர்கிடம் படத்தை எடிட் செய்யும் வசதியெல்லாம் இல்லை. அதனால் படத்தை பிடிக்கும் போதே அதை எடிட் செய்ய வேண்டும். உதாரணம்..
 |
முதலில் ஒரு ரயிலை ஓடவிட்டு அதை படம் பிடிப்பார். நிறுத்தி இன்னொரு ரயிலை ஓடவிட்டு படம் பிடிப்பார். இரண்டையும் நிறுத்திவிட்டு சில மனித பொம்மைகளை படம் பிடிப்பார். இதை தொடர்ந்து மீண்டும் முதல் ரயில்... இரண்டாம் ரயில்.... மனிதர்கள்... தொடர்ந்து ரயில்கள். இரண்டும் மோதிக்கொள்ள அந்த விபத்தை படம் பிடித்தார். |
படத்தை பார்த்த போது பரபரப்பான ரயில் விபத்து படமாக்கபட்டிருந்தது. ஸ்பீல்பெர்க் முடிவு செய்தார். இனி இது போன்று நிறைய படங்கள் பிடிக்க..
ஸ்பீல்பெர்க் உலகை பார்கும் விதமும் வித்தியாசமாக இருந்தது. ஒரு நாள் தன் அம்மா சமைத்து கொண்டிருக்கும்போது குக்கர் வெடித்து பறந்து உணவெல்லாம் சிதறி ஒரு சிறு விபத்து. ஆனால் ’லே’விற்கு ஒன்றும் ஆகவில்லை. அனைவரும் அதிர்ச்சியாகவும், சற்றே பயத்துடனும் அந்தக் காட்சியை பார்த்து கொண்டிருக்க ஸ்பீல்பெர்க் அதை பார்த்து பரவசமாகவும், சத்தமாகவும் சொன்னது....
ஒரு மிகப் பெரிய ’வாவ்’!!!!
பிரம்மாண்டம் வளரும்...
இப்பகுதி ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை அன்று புதுப்பிக்கப்படும்.